கூடலூரில் விடிய விடிய மழை: வீடுகளுக்குள் வெள்ளம்- போக்குவரத்து பாதிப்பு
கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்ததால் குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கூடலூர், பந்தலூர், சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிறு மதியம் தொடங்கிய பலத்த மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. இதனால் ஆங்காங்க மண் சரிவு ஏற்பட்டது. தேவாலா பஜாரில் வெள்ளம் பெருக்கெடுத்து சென்றதால் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றன. மண்சரிவினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
குடியிருப்புகளில் வெள்ளம்
கனமழையால் பந்தலூர், கூடலூர் பகுதியில் உள்ள அத்திகுன்னா, கே.கே.நகர் தொண்டியாளம் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. 150க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததை அடுத்து அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு பந்தலூரில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கூடலூர் எம்,எல்.ஏ. திராவிடமணி, பந்தலூர் வருவாய்துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள் பின்னர் அவர்களுக்கு மேற்கொள்ளவேண்டிய நிவாரணப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
கன மழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக ஆர்.டி.ஓ. அறிவித்துள்ளார்.