நாளை தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள்: அஞ்சலி செலுத்த அரசியல் கட்சிகளுக்கு அரசு நேரம் ஒதுக்கீடு
பரமக்குடி: தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அரசியல் கட்சிகளுக்கும், சமூக அமைப்புகளுக்கும் அரசு நேரம் ஒதுக்கீடு செய்துள்ளது.
தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தின விழா நாளை (11ம் தேதி) ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெறுகிறது. தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகளுக்கு அரசு நேரம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
செல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் தலைமையில் செல்லூர் கிராம மக்கள் காலை 7 மணிக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.
அதிமுக சார்பில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் சுந்தரராஜன் காலை 7.30 மணிக்கும், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி எம்.பி. ரித்தீஷ், திமுக அம்பேத்கார் வழக்கறிஞர் பிரிவு கந்தசாமி ஆகியோருக்கு காலை 8 மணிக்கும், தேவேந்திர இளைஞர் பேரவையைச் சேர்ந்த அழகர்சாமி பாண்டியன் காலை 8.30க்கும், தியாகி இம்மானுவேல் பேரவை நிறுவனர் சந்திரபோஸ் 8.45க்கும் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் சுப. தங்கவேலன் எம்.எல்.ஏ. (திமுக) காலை 9 மணிக்கும், திராவிடர் விடுதலைக் கழகம் தலைவர் கொளத்தூர் மணி காலை 9.30 மணிக்கும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் சம்பத் காலை 9.45க்கும், ஆதித்தமிழர் பேரவை அதியமான் காலை 10.15க்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. காலை 10.30க்கும் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காலை 11 மணிக்கும், மக்கள் விடுதலை கட்சி தலைவர் (முன்னாள் எம்.எல்.ஏ.) முருகவேல்ராஜன் காலை 11.15க்கும், தேவேந்திரர் அறக்கட்டளை வழக்கறிஞர் சந்திரன் காலை 11.30க்கும், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நண்பகல் 12 மணிக்கும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜி.கே.மணி பகல் 12.30க்கும் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ராம் பிரபு பகல் 12.45க்கும், பாஜக மாநில பொதுச் செயலாளர் சுப.நாகராஜன் பகல் 1 மணிக்கும், மள்ளர் இலக்கிய கழக தலைவர் அண்ணாமலை பகல் 1.30க்கும், தமிழ்ப்புலிகள் சார்பில் நாகை திருவள்ளுவன் பகல் 1.45க்கும், தியாகி இம்மானுவேல் பேரவை ஊர்க்காவலன் தேசிங்குராஜா பகல் 2 மணிக்கும், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் பிற்பகல் 2.30க்கும் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சவுந்திரராஜன் மாலை 3 மணிக்கும், மதிமுக சார்பில் கணேசமூர்த்தி மாலை 3.15க்கும், பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொருளாளர் ஜீவன்குமார் மாலை 3.30க்கும், தமிழர் தேசிய கூட்டமைப்பின் பழ.நெடுமாறன் மாலை 3.45க்கும், வீரதேவேந்திரர் பேரவை சார்பில் பி.எம்.பாண்டியன் மாலை 4 மணிக்கும், மறுமலர்ச்சி மக்கள் தமிழகம் சார்பில் துரை அரசன் மாலை 4.15க்கும், மருதம் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்ராமு மாலை 4.30க்கும் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பின்பு முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளன்று கலவரம் ஏற்பட்டு போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் உயிரிழப்புகள் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.