17ம் தேதி கூடங்குளம் போராட்டத்தில் பங்கேற்கிறேன்: கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன்
கேரளாவைச் சேர்ந்த குறும்பட இயக்குனர் மனிலா சி. மோகன் எடுத்துள்ள அணுகுண்டு என்ற ஆவணப் படம் கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கு போட்டுக் காட்டப்பட்டது.
அதைப் பார்த்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அணு உலைகளால் பூமி்ககு ஏற்படும் ஆபத்துகளை மனிலா மோகன் தனது படத்தில் அழகாக காண்பித்துள்ளார். அவர் ஆதாரங்களுடன் இந்த ஆவணப் படத்தை எடுத்துள்ளார். அணு உலைகளால் நன்மையை விட ஆபத்து தான் அதிகம் என்பதால் பல நாடுகள் அவற்றை புறக்கணித்துவிட்டன.
அணு உலைகளால் ஏற்படும் ஆபத்துக்கு ஜப்பானின் புகுஷிமா அணு உலை விபத்தே உதராணமாகும். கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த போராட்டம் மிகவும் தேவையானது தான். மக்களுக்கு பிடிக்காத விஷயத்தை அரசு அவர்கள் மீது திணிக்கக் கூடாது.
போராட்டக்காரர்களை மத்திய, மாநில அரசுகள் தடியடி நடத்தி ஒடுக்க நினைக்கக் கூடாது. மேலும் போராட்டக்காரர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது என்றும், போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு சதி உள்ளது என்றும் வதந்தியைப் பரப்பக் கூடாது. போராட்டம் நடத்துபவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டுமே தவிர அவர்களை சுட்டுத்தள்ளக் கூடாது. நான் வரும் 17ம் தேதி கூடங்குளம் சென்று அங்கு நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வேன் என்றார்.