20ம் தேதி வரை தமிழகத்திற்கு 10,000 கன அடி தண்ணீர் தர கர்நாடகம் சம்மதம்
பெங்களூர்: தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிட முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள விதான்சௌதாவில் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை அம்மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டார் கூட்டினார். இந்த கூட்டம் நேற்று நடந்தது.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வரும் 19ம் தேதி காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டம் குறித்து ஆலோசனை நடத்தவே அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டினேன். அந்த கூட்டத்தில் காவிரி பிரச்சனை குறித்து கட்சி தலைவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது.
தற்போது தினமும் 7,600 கன அடி முதல் 8,000 கன அடி நீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 20ம் தேதி வரை அந்த அளவை 10,000 கன அடியாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது என்றார்.
முன்னதாக தமிழகத்திற்கு 10,000 கன அடி நீர் திறந்துவிடுவதாக கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை உறுதியளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.