பாகிஸ்தானில் 2 ஆலைகளில் பயங்கர தீ விபத்து: 271 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஜவுளி ஆலை மற்றும் ஷூ தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 271க அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஷூ தயாரிக்கும் ஆலை ஒன்றில் நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. குறுகிய சாலையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த அந்த 4 அடுக்குமாடி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டபோது 45 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். இந்த விபத்தில் ஆலை உரிமையாளர், அவரது மகன் உள்பட 25 பேர் உடல் கருகி பலியாகினர், 5 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் நடந்த சில மணிநேரத்தில் கராச்சியில் உள்ள ஜவுளி ஆலை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு பெண், 10 வயது குழந்தை உள்பட 75 பேர் உடல் கருகி பலியாகினர், 31 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் 40 வண்டிகளில் அங்கு சென்றனர். நேற்று மாலை பரவிய தீயை இன்று தான் அதுவும் தீவிர போராட்டத்திற்கு பிறகு அணைத்துள்ளனர். இந்நிலையில் அந்த கட்டிடத்தின் அடிதளத்தில் குவியல் குவியலாக உடல்கள் கிடந்துள்ளது. இதுவரை மீட்கப்பட்டுள்ள உடல்களை சேர்த்தால் கராச்சி ஆலையில் மட்டும் 246 பேர் பலியாகியுள்ளனர்.
அந்த ஆலையில் தீவிபத்து ஏற்பட்டவுடன் பலர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மாடிகளில் இருந்து கீழே குதித்தனர். இந்த ஆலையில் 2,000 பேர் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த இரு நகரங்களில் ஏற்பட்ட உயிர் இழப்புகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் பர்வேஸ் அஷ்ரப் தெரிவி்த்துள்ளார்.