அல்-ஜவாஹிரி புதிய வீடியோ: பெண் தீவிரவாதி ஆபியாவை விடுவிக்குமாறு மிரட்டல்
ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட பிறகு ஜவாஹிரியிடமிருந்து வீடியோக்கள் வெளியாவது குறைந்திருந்த நிலையில் இப்போது அவரது புதிய வீடியோவை அல் கொய்தா வெளியிட்டுள்ளது. சில அல் கொய்தா இணையத்தளங்களில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
அதில் பேசியுள்ள ஜவாஹிரி, கடந்த ஆகஸ்ட் மாதம் லாகூரில் வைத்து கடத்தப்பட்ட வாரன் வெயின்ஸ்டீனை இன்னும் உயிருடன் தான் வைத்துள்ளோம். அவரை விடுவிக்க வேண்டுமானால் அமெரிக்க சிறையில் உள்ள ஒமர் அப்துல் ரஹ்மான், ஆபியா சித்திகி ஆகியோரை அமெரிக்கா விடுவிக்க வேண்டும்.
கண் பார்வையற்றவரான ஒமர் அப்துல் ரஹ்மான் நியூயார்க்கைச் சேர்ந்தவர். 1990ம் ஆண்டில் நியூயார்க்கில் தீவிரவாத தாக்குதலுக்கான சதித் திட்டத்துக்கு உதவியதாக கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மூளை நரம்பியல் விஞ்ஞானியான ஆபியா சித்திகி என்ற பெண் அமெரிக்காவில் படித்தவர். 2008ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டார். இவர் நியூயார்க்கில் குண்டுவெடிப்புகள் நடத்துவதற்கான சதித் திட்டம் தீட்டியிருந்ததாக கைது செய்யப்பட்டு 86 ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டு, ஜெயிலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அல் கொய்தா நம்பர் 2 லிபி மரணம்:
ஜவாஹிரி தனது வீடியோவில் இன்னொரு முக்கிய தகவலையும் தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா உளவு விமான தாக்குதலில் அல் கொய்தாவின் முக்கிய தளபதியான அபு யஹ்யா அல் லிபி கொல்லப்பட்டுவிட்டார் என்று ஜவாஹிரி தெரிவித்துள்ளார்.
லிபியா நாட்டைச் சேர்ந்த லிபி கடந்த 2005ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்காவின் அதி பாதுகாப்பு மிக்க சிறையிலிருந்து தப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜவாஹிரியின் இந்த வீடியோ ரம்ஜான் மாதத்தில் எடுக்கப்பட்டு, செப்டம்பர் 11 நியூயார்க் தாக்குதல் தினத்தையொட்டி வெளியிடப்பட்டுள்ளதாக அல் கொய்தா கூறிள்ளது.