3-வது அணிக்கு தயாராகிறார் முலாயம்சிங் - மத்திய அரசு மீது கடும் தாக்கு
கொல்கத்தா: மக்களவைத் தேர்தலை 3-வது அணி மூலம் சந்திப்பது என சமாஜ்வாதி கட்சி முடிவு செய்திருக்கிறது. இதற்கு முன்னோட்டமாக மத்திய அரசையும் காங்கிரசையும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளார் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய முலாயம்சிங் கூறியதாவது:
அடுத்து மத்தியில் அமையும் ஆட்சி சமாஜவாதியின் ஆதரவு இல்லாமல் அமையாது. பல்வேறு சிறிய கட்சிகளின் ஆதரவு இல்லாமால் காங்கிரஸாலோ, பாஜகவாலோ ஆட்சி அமைத்துவிட முடியாது. காங்கிரஸ் தலைமையான அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். பாஜகவின் வளர்ச்சியோ எப்போதோ நின்று விட்டது. இதனால் அடுத்து மத்திய ஆட்சியில் சமாஜவாதிதான் முக்கியப் பங்கு வகிக்கும். நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு உள்பட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளால் காங்கிரஸ் கட்சி மக்கள் மத்தியில் தனது மதிப்பை இழந்து வருகிறது. நாள்தோறும் ஒரு ஊழல் என்ற கணக்கில் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. இந்த சூழ்நிலையை தங்களுக்கு ஆதரவாக்கிக் கொள்ள பாஜக முயற்சிக்கிறது. ஆனால் அவர்கள் ஆட்சி அமைத்தால் தங்கள் கொள்கைகளின்படி நாட்டை பின்னோக்கித்தான் பாஜக அழைத்துச் செல்லும். எனவே காங்கிரஸ், பாஜக அணியைச் சேராத கட்சிகளைத் தொடர்பு கொள்ளத் தயாராகி வருகிறேன் என்றார் முலாயம் சிங்.
சமாஜ்வாதி கட்சியின் பொதுச்செயலாளர் மோகன்சிங் கூறியதாவது:
பொருளாதாரப் பிரச்னைகள், அரசியல் பிரச்னைகள் என பல்வேறு விவகாரங்கள் எழுகின்றன. மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. உருப்படியாக என்ன செய்தார்? ஆனால் இவை தொடர்பாக உருப்படியாக எந்த ஒரு கருத்தையும் ராகுல் காந்தி தெரிவித்தது இல்லை. இப்படி இருக்கும் நிலையில் எதிர்காலத்தில் அவரை நம்பி நாட்டின் ஆட்சிப் பொறுப்பை எப்படி ஒப்படைக்க முடியும்? நேரு குடும்பத்தின் வாரிசு என்பதால், அவரால் நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகளை சமாளிக்க முடியும் என்று சிலரால் நம்பப்படுகிறது. ஆனால், எனக்குத் தெரிந்த வரையில் ராகுலிடம் அத்தகைய திறமைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அவரது கரங்களில் நமது நாடு பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை என்றார். இப்போதைய காங்கிரஸ் அரசு பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளது. எனினும் பாஜக போன்ற மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று மத்திய அரசுக்கு வாழ்வு அளித்து வருகிறோம். இப்போதைய அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸýடன் ஒப்பிடும்போது பாஜக சற்று வலுவாக உள்ளது என்று கூறலாம். மாநிலக் கட்சிகளிடையே ஒற்றுமையில்லை. காங்கிரஸ், பாஜக ஆகிய இருகட்சிகளும் இல்லாத 3-வது அணி அமையுமா என்று கேட்கிறீர்கள். இதற்கான விதை ஊன்றப்பட்டு விட்டது. சரியான நேரத்தில் அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்றார் அவர்.