லிபியா தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு- தீவிர கண்காணி்ப
டெல்லி: லிபியாவில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதில் அந்நாட்டுக்கான அமெரிக்க தூதர் உள்பட 4 பேர் பலியாகினர். இதையடுத்து இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக கட்டிடங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபியையும் கீழ்த்தரமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்துக்குக் கண்டனம் தெரிவித்து லிபியா மற்றும் எகிப்து நாடுகளில் அமெரிக்கத் தூதரங்கள் மீது பயங்கர தாக்குதல்கள் நடந்தன. லிபியாவின் பெங்சாய் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த தாக்குதலில் லிபியாவுக்கான அமெரிக்க தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீபன்ஸ் மற்றும் 3 தூதரக அதிகாரிகள் பலியாகினர்.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக மற்றும் துணைத் தூதரக கட்டிடங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போட உத்தரவிட்டுள்ளோம் என்றார்.
அதன்படி டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம், மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், சென்னையில் உள்ள துணை தூதரகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த 5 கட்டிடங்களுக்கும் 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்கு செல்பவர்கள் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.