எனக்கும், அருணகிரிநாதருக்கும் இடையே மீண்டும் கருத்துவேறுபாடா?: நித்யானந்தா விளக்கம்
நித்யானந்தா திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்கையிலும், முடிக்கையிலும் நான் அருணாச்சலேஸ்வரரை வழிபடுவேன். கொடைக்கானலில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 400 பக்தர்கள் பங்கேற்ற 20 நாள் தியான பயிற்சி முகாமை நடத்தினேன். அது முடிந்த கையோடு அருணாச்சலேஸ்வரரை வழிபட வந்தேன்.
மேலும் வரும் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை திருவண்ணாமலையில் தியானப் பயிற்சி முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தற்போது நலமாக உள்ளார். மன உளைச்சலால் தான் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது என்று கூறுவதில் உண்மை இல்லை. தனது உடல் நல பாதிப்பிற்கு மன உளைச்சல் காரணம் இல்லை என்று அவரே என்னிடம் தெரிவி்த்தார்.
மதுரை ஆதீனத்தில் இருந்து எனது சீடர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர் எனற தகவல் உண்மை இல்லை. மதுரை ஆதீனத்தில் வழக்கமாக நடக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தினமும் 2,500 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இது தவிர வாரம் ஒரு முறை இலவச முகாம் நடத்தப்படுகிறது. அதில் 4,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிகிச்சை பெறுகின்றனர்.
ஆண்மை பரிசோதனை செய்ய விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆண்மை பரிசோதனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டால் அதை ஏற்று பரிசோதனைக்கு செல்வேன். நீதிமன்றம் சொல்லும்படி நடப்பேன். எனக்கும், அருணகிரிநாதருக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறுவது வெறும் வதந்தியே என்றார்.