விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறி விட்டதே அரசு... முலாயமின் உப்புச் சப்பில்லாத பேச்சு!
டெல்லி: மத்திய அரசு தவறு செய்யும்போதெல்லாம் ஏதாவது அறிக்கை விட்டு வீராப்பாக பேசி விட்டு, பின்னர் மத்திய அரசுடன் பகிரங்கமாகவும், ரகசியமாகவும் உறவாடி வரும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாதி கட்சி ஒப்புக்குச் சப்பாக மத்திய அரசை லேசாக ஒரு தட்டு தட்டி விட்டுப் போயுள்ளது.
கொல்கத்தாவில் நடைபெறும் சமாஜ்வாடிக் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அக்கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் பேசுகையில்,
உணவுப் பணவீக்கம் மற்றும் ஒட்டுமொத்த பணவீக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்ததற்கு மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே காரணம். உணவுப் பொருள்களுக்கு நாட்டில் எவ்வித பற்றாக்குறையும் இல்லை. ஆனால் பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதென்றால், அதற்கு மத்திய அரசின் கொள்கைகள்தான் முக்கியக் காரணமாகும்.
நாட்டில் போதிய உணவின்றி ஒரு பக்கம் மக்கள் தவிக்கிறார்கள். ஆனால் மற்றொரு புறமோ அரசு தானியக் கிடங்குகளில் ஏராளமான உணவு தானியங்கள் போதிய பாதுகாப்பு இல்லாமல் வீணாகின்றன.
பதுக்கல்காரர்கள் ஏராளமான உணவு தானியத்தை பதுக்கி வைத்துள்ளனர். இதை மீட்க அரசு அதிரடி சோதனை மேற்கொள்ள வேண்டும். அவ்விதம் சோதனை நடத்தினாலோ ஏராளமான உணவு தானியங்கள் மீட்கப்படும். விலை உயர்வும் கட்டுக்குள் வரும்.
இந்த விஷயத்தை அரசு சரிவரக் கையாளாததே அதன் பலவீனத்தைக் காட்டுகிறது என்றார்.
இப்படிப் பேசிய முலாயம் சிங் 3வது அணி குறித்தும் பேசினார். இப்போதைக்கு நாங்கள் யாருடனும் கூட்டணியில் இல்லை. எதிர்காலத்தில் 3வது அணி அமைப்பது குறித்து லோக்சபா தேர்தலுக்குப் பின்னரே முடிவு செய்வோம் என்று கூறினார்.
அதாவது, ஜெயித்து வந்த பிறகு தேவைக்கேற்றார் போல கூட்டணியை அமைப்பது என்பது இதன் பொருள்.
என்னா ஒரு சாமர்த்தியம்...!