ஜெ.க்கு கொள்ள பாசம்.. வீரபாண்டி ஆறுமுகத்தை சிறையில் வைத்திருப்பதன் ‘ரகசியம்’ சொல்லும் டி.ஆர். பாலு
வேலூர்: திமுக் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது ஜெயலலிதாவுக்கு அதிக பாசம் இருப்பதால்தான் சிறையிலேயே வைத்திருக்கிறார் என்று திமுக எம்.பி.டி.ஆர்., பாலு கூறியுள்ளார்.
சேலம் அங்கமாள் காலனி குடிசைக்கு தீ வைத்த வழக்கில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் குண்டாஸில் வேலூர் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவரை ஏற்கெனவே திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட திமுக முன்னணியினர் சந்தித்துவிட்டனர்.
இதைத் தொடர்ந்து நேற்று திமுக எம்.பி. டி.ஆர். பாலு வேலூர் சிறையில் வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்துப் பேசினார்.
இதன் பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வீரபாண்டி ஆறுமுகம் ஆரோக்கியமாக இருக்கிறார். குண்டர் சட்த்தில் கைது செய்தால், மேல்முறையீடு செய்யும்போது முறையான குற்றச்சாட்டு இல்லையென்றால் 100 நாளில் விடுதலை செய்ய வேண்டும். ஆனால், வீரபாண்டி ஆறுமுகத்தை விடுதலை செய்யாமல், ஜெயலலிதா அரசு உள்ளேயே வைத்துள்ளது. அவர் மேல் ஜெயலலிதாவுக்கு பாசம். அதனால்தான் அவரை உள்ளே வைத்து பாதுகாக்கிறார் என்றார் அவர்.