விழுப்புரத்தி கோலாகலமாக திமுகவின் முப்பெரும் விழா
விழுப்புரம்: திமுக ஆண்டுதோறும் நடத்தும் முப்பெரும் விழா இன்று காலை விழுப்புரத்தில் தொடங்கியது.
திமுக சார்பில் பெரியார், அண்ணா பிறந்த நாள் விழா, திமுக உதயமான நாள் விழா ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு விழுப்புரத்தில் மாநாடு நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்றம் நடைபெற்றது. மாலையில் குத்தூஸ் குழுவினரின் இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.
மாலையில் நடைபெறும் விழாவில் தமிழறிஞர் அப்பாதுரைக்கு பெரியார் விருதும், முன்னாள் அமைச்சர் ரகுமான்கானுக்கு அண்ணா விருதும் முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு பாவேந்தர் விருதும் முன்னாள் எம்.பி. ஆர்.டி. சீத்தாபதிக்கு கலைஞர் விருதும் வழங்கப்படுகிறது. இதன் பின்னர் திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் உரையாற்றுகின்றனர்.
விழாவையொட்டி விழுப்புரம் மாவட்ட எல்லையான ஒலக்கூரில் இருந்து விழா மேடை வரை இருபுறங்களிலும் கொடி தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. திமுகவின் முப்பெரும் விழாவால் விழுப்புரம் நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர்.