கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 3 நாளில் யுரேனியத்தை 'ரொப்பிருவோம்'... நாராயணசாமி சொல்கிறார்!
பழனி: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இன்னும் மூன்றே நாட்களில் யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி முடிவடையும் என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
நாராயணசாமிதான் கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாடுகளை அவ்வப்போது பறை சாற்றி வருகிறார். இதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் கூட சமீபத்தில் வாங்கிக் கட்டிக் கொண்டார். அதையடுத்து சற்று அமைதி காத்து வந்த அவர் தற்போது மறுபடியும் பேசத் தொடங்கியுள்ளார்.
பழனிக்கு வந்த அவர் அங்கு பாலதண்டாயுதபாணியை கும்பிட்டு பயபக்தியுடன் வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சிவகாசி பட்டாசு விபத்தில் பலியான குடும்பத்தினருக்கு ரூ.2 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகள் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
சிவகாசி எம்.பி. மாணிக் தாகூர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் விஞ்ஞான பூர்வமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு ரெயில்வே துறை, தபால் துறையில் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கூடங்குளத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டம் அர்த்தமற்றது. சென்னை உயர்நீதிமன்றமே அணு உலை மிகவும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் ரஷிய விஞ்ஞானிகள் அணு உலையில் யுரேனியம் நிரப்புவதற்காக ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அதற்கான உத்தரவுகள் வரும். பின்னர் 3 நாட்களுக்குள் அணு உலைகளில் யுரேனியம் எரி பொருள் நிரப்பும் பணி தொடங்கும். அதன் பின்பு 25 நாட்களில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்படும்.
தமிழ்நாட்டில் தற்போது மின்சாரம் தட்டுப்பாடு அதிகரித்து காணப்படுகிறது. எனவே கூடங்குளத்தில் தயாரிக்கப்படும் முழு மின்சாரத்தையும் தமிழ கத்திற்கே வழங்க பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நான் வலியுறுத்துவேன். பாராளுமன்றத்தை முடக்கி வரும் பாரதீய ஜனதாவால் மக்களின் வரிப்பணம் ரூ.52 கோடி வீணாகி உள்ளது. இதற்கு முழு பொறுப்பு பாரதீய ஜனதா கட்சிதான் என்று பேசினார்.