பட்டிலிருந்து நகைக்குத் தாவும் நல்லி... ரூ.1000 கோடி விற்பனைக்கு இலக்கு
நல்லி குழுமத்தின் ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்தவரான நிராந்த் நல்லியின், படிப்பு கணிப்பொறியியல் துறையாக இருந்தாகும். இருப்பினும் குடும்ப பாரம்பரியமான ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனைத் துறையில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.
நல்லி குடும்ப வாரிசான லாவண்யா 21 வயதிலிருந்தே அதாவது 2005 ம் ஆண்டிலேயே குடும்ப தொழிலில் களம் இறங்கிவிட்டார். அவருடைய சகோதரரான நிராந்த் தற்போது தான் பொறுப்பேற்றுள்ளார். 5 வது தலைமுறை பொறுப்பேற்ற பின்னர் நல்லி குழுமம் கார்ப்பரேட் அந்தஸ்தை எட்டியுள்ளது.
தற்போது பொறுப்பேற்றுள்ள நிராந்த் நல்லி பட்டு விற்பனை நிறுவனத்தை அடுத்த கட்டமாக நகை விற்பனைத் துறைக்கு கொண்டு சென்றுள்ளார். சென்னை தியாகராய கரில் உள்ள கடையில் முதன் முதலாக தங்க விற்பனை மையத்தை துவங்கியுள்ளனர். இதற்காக முதல் கட்டமாக 100 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
பட்டு உற்பத்தி மற்றும் விற்பனையில் புகழ் பெற்ற நல்லி நிறுவனம் தங்க நகை விற்பனையிலும் சிறப்பான பெயரை பெறும் என்று நல்லி குழுமத்தின் துணைத் தலைவர் ராம்நாத் தெரிவித்துள்ளார்.
பட்டென்றால் நல்லி என்ற பெயர் அனைவருக்கும் நினைவுக்கு வருவதைப் போல நகை விற்பனையிலும் எங்களின் பெயர் நிலைத்திருக்கும் வகையில் செயல்படுவோம் என்றும் ராம்நாத் கூறியுள்ளார்.
ஒசூரில் 15 ஏக்கரில் நகை உற்பத்தி மையம் விரைவில் தொடங்க உள்ளதாக கூறிய ராம்நாத், எதிர்காலத்தில் 1000 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
நல்லியின் நகை விற்பனை மையம் இந்தியாவில் 23 நகரங்களில் தொடங்கப்பட உள்ளது. சிங்கப்பூர், கலிபோர்னியா உள்ளிட்ட வெளிநாட்டு நகரங்களில் 10 விற்பனை மையங்களை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.