காஷ்மீர் எல்லையில் 80 சுரங்கப் பாதைகளை தீவிரவாதிகள் அமைக்க வாய்ப்பு!
டெல்லி: இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் படு ரகசியமாக செயல்பட்டு பெரிய சுரங்கப் பாதையைத் தோண்டியுள்ள நிலையில், எல்லைப் பகுதியில் மேலும் 80 இடங்களில் சுரங்கப் பாதைகளைத் தோண்டும் வாய்ப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் இத்தனை காலமாக இந்தியாவில் படு சுதந்திரமாக, சர்வ சாதாரணமாக, படு பயங்கரமாக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றால், நிச்சயம் அவர்கள் மாஸ்டர் பிளான் போடாமல் செய்ய முடிந்திருக்காது. படு புத்திசாலித்தனமாகத்தான் அவர்கள் ஆரம்பத்திலிருந்தே செயல்பட்டு வருகிறார்கள். அதை முறியடிக்கும் திறமை நம்மிடம் இருந்தும் கூட அலட்சியம், அஜாக்கிரதை, கவனக்குறைவு, மெத்தனம் போன்ற காரணங்களால் நாம் தொடர்ந்து கோட்டை விட்டு வருகிறோம்.
இந்த நிலையில் எல்லைப் பகுதியில், காஷ்மீரில் தீவிரவாதிகள் சுரங்கப் பாதை அமைத்திருப்பது சமீபத்தில் தெரிய வந்து அனைவரும் அதிர்ந்தனர். சம்பா மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சுரங்கப் பாதை வழியாகத்தான் அவர்கள் இத்தனை காலமாக படு சுதந்திரமாக காஷ்மீருக்குள் ஊடுறுவியிருக்க முடியும் என்று பாதுகாப்புப் படையினர் நம்புகின்றனர்.
எல்லையில் ராணுவம், துணை ராணுவம், எல்லைப் பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை என ஏகப்பட்ட வீரர்கள் 24 மணி நேர தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்தில் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனாலும் அவர்களையும் மீறி தீவிரவாதிகள் ஊடுறுவி வந்ததற்கு இப்போதுதான் சரியான காரணம் தெரிய வந்துள்ளது. அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்துக்கு இந்த சுரங்கப் பாதைதான் இத்தனை காலமாக உதவியுள்ளன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து சம்பா பகுதியில் நுழையும் இந்த 400 மீட்டர் நீளம், 25 மீட்டர் ஆழம் கொண்டதாக அமைந்திருந்தது. மிக மிக நவீனமான முறையில் இதை அமைத்துள்ளனர்.
இதையடுத்து பாகிஸ்தானை ஒட்டியுள்ள காஷ்மீர் முழுவதும் தீவிர சோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதற்காக இந்திய நிலவியல் துறையின் உதவி கோரப்பட்டது அவர்கள் நவீன சென்சார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய நடத்திய ஆய்வில் இந்திய எல்லைப் பகுதியில் 80 இடங்களில் தீவிரவாதிகள் சுரங்கம் அமைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து இப்பகுதிகளில் கண்காணிப்பையும், பாதுகாப்பையும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது ராணுவம்.
இனிமேலாவது சுரங்கப் பாதை அமைக்கும்போதே கண்டுபிடியுங்கள், அமைத்த பிறகு கண்டுபிடித்து ஆச்சரியப்படாதீர்கள் என்று மக்கள் பாதுகாப்புப் படையினருக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.