தூக்குத் தண்டனையை தளர்த்த கோரி கசாப் கருணை மனு- ஜனாதிபதிக்கு அனுப்பினான்
2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தானிலிருந்து கடல் மார்க்கமாக ஊடுறுவிய பத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் மூன்று நாட்கள் மும்பையில் நடத்திய வெறியாட்டத்தைப் பார்த்து உலகமே அதிர்ந்து போனது. இந்த கொடூர தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் 9 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். கசாப் மட்டும் பிடிபட்டான்.
அவனுக்கு மும்பை தனி நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இதையடுத்து பாம்பே உயர்நீதிமன்றம் இந்தத் தண்டனையை உறுதி செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தான் கசாப். ஆனால் இந்த அப்பீல் மனுவை கடந்த மாதம் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. மேலும் அவனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையையும் உறுதி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை தளர்த்தி ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியுள்ளான் கசாப். தற்போது அவன் அடைக்கப்பட்டுள்ள மும்பை ஆர்தர் சாலை சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் மூலம் இந்த மனு அனுப்பப்பட்டிருக்கிறது.
மும்பை தீவிரவாத சம்பவத்தில் வெளிநாட்டினர் உள்பட 160க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.