சமூக நீதிக்காக இன்னும் போராடி வரும் இயக்கம் தி.க மட்டுமே-கி.வீரமணி
ஈரோடு: சமூக நீதிக்காக இன்னும் போராடி வரும் ஒரே இயக்கம் திராவிடர் கழகம் மட்டுமே என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், திருநகர் காலனியில் பெரியாரின் 134வது பிறந்த நாள் விழாவையொட்டி திராவிடர் கழகத்தின் சார்பில் திறந்தவெளி மாநாடு நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
சமூக நீதிக்காக போராடக்கூடிய இயக்கமாக இன்னும் இருப்பது திராவிடர் இயக்கம் மட்டுமே. சுயமரியாதை திருமணங்களை சட்ட உரிமையாக்கியவர் அண்ணா. சென்னை உயர்நீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்டவர் யாரும் நீதிபதி ஆக முடியவில்லை என்பது குறித்து பெரியார் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, டெல்லிக்கு தனது அமைச்சரை அனுப்பி நடவடிக்கை எடுத்தார். கடந்த 1971ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
பெரியார் வகுத்த கொள்கைகளின் மூலம் வெற்றிகள் கிடைத்து கொண்டே இருக்கிறது. ஆனால் நமது இலக்கு இன்னும் ஓயவில்லை. ரூ.2,400 கோடி செலவழித்த பிறகும் முடங்கி கிடக்கும் சேது கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வைக்க வேண்டும். தமிழனின் திட்டமான சேது கால்வாய் திட்டத்தை செயல்படுத்த திராவிடர் கழகம் விரைவில் போராட்டம் நடத்தும்.ஈழத்தமிழர்களின் வாழ்வு உரிமையை காப்பாற்றி, அதை மீட்டெடுக்க வேண்டும் என்ற கருத்தை உலக நாடுகளின் பார்வைக்கு கொண்டு செல்ல டெசோ அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. பெரியார் விட்டு சென்ற பணிகளை தொடர்ந்து செய்வோம். சமூக நீதி கிடைக்க போராடுவோம் என்றார்.