கூடங்குளம் போராட்ட வழக்கு: வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜரான உதயகுமார் மனைவி
கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் 400 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். அவ்வாறு போராடுபவர்கள் மீது போலீசார் இதுவரை 200க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளனர். அதில் 73வது வழக்கில் போராட்டக்குழு தலைவர் உதயகுமார், புஷ்பராயன், மைபா ஜேசுராஜ், ஜெயக்குமார், முகிலன், அகிலன் உள்பட 3,550 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் பெயர் தெரிந்த 30 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இது தவிர 141வது வழக்கில் உதயகுமார் முதல் குற்றவாளியாகவும், அவரது மனைவி மீரா 36வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டு அவர்கள் உள்பட 36 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளில் வள்ளியூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகுமாறு உதயகுமாருக்கு சம்மன் கொடுக்க போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவரது பெற்றோர் சம்மனை வாங்க மறுத்ததால் 141வது வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உதயகுமாரின் மனைவி மீராவிடம் சம்மன் அளிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் இன்று வள்ளியூர் நீதிமன்றத்திற்கு வந்தார். ஆனால் நீதிமன்றத்திற்கு முன்பு ஏராளமானோர் கூடியிருந்ததால் அவர் பின் புறமாக உள்ளே சென்று நீதிபதி பபிதா முன்பு ஆஜரானார்.
உதயகுமார் இன்னும் தலைமறைவாகவே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.