திரினமூலுடன் சமாதானத்திற்கு காங். முயற்சி?- இல்லை என்கிறார் அமைச்சர் முகுல் ராய்
காலை 10 மணியளவில் கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் டீசல் விலை உயர்வை திரும்பப் பெறலாமா அல்லது கேஸ் சிலிண்டர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாட்டைத் திரும்பப் பெறலாமா என்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சரியாக 11. 55 மணிக்கு கூட்டம் முடிவடைந்தது. கூட்டம் முடிந்ததும் வெளியே வந்த சோனியா காந்தி அங்கு கூடியிருந்த பத்திரிக்கையாளர்களைப் பார்த்து பெருவிரலை உயர்த்திக்காட்டி புன்னகைத்தார்.
கூட்டத்திற்குப் பின்னர் காங்கிரஸ் மற்றும் மத்திய அரசின் புதிய நிலைப்பாடு குறித்த தகவல் திரினமூ்ல் காங்கிரஸ் தலைமைக்கு தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், புதிய சமரச திட்டம் ஒன்றை காங்கிரஸ் கட்சி தலைமை திரினமூ்ல் காங்கிரஸுக்குத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் இதை ரயில்வே அமைச்சர் முகுல் ராய் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மத்திய அரசிடமிருந்து எங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை. எங்களது நிலையை நேற்ற தலைவர் மமதா பானர்ஜி தெளிவுபடுத்தி விட்டார். இனிமேல் எந்த மாற்றத்திற்கும் வாய்ப்பில்லை. கட்சித் தலைவர் அறிவித்தபடி நாங்கள் வெள்ளிக்கிழமை எங்களது ராஜினாமா கடிதங்களை அரசிடம் அளிப்போம் என்றார்.
முகுல் ராய் இப்படிக் கூறினாலும் கூட மமதா பானர்ஜியுடன் அரசுத் தரப்பிலும், காங்கிரஸ் தரப்பிலும் சமரச தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. எனவே மமதாவின் கோரிக்கைகளில் ஒரு சிலவற்றை ஏற்றுக் கொள்ள காங்கிரஸ் முன்வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.