கடும் கஷ்டத்தில் காங். ஆட்சி... கருத்து தெரிவிக்க ஜெ. மறுப்பு!
காவிரி நதி நீர் ஆணையத்தின் 7வது கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெறுகிறது. மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து சிறுபான்மை அரசாக மாறியுள்ள பின்னணியில் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று பிற்பகல் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இதற்காக அவர் போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து புறப்பட்டு வெளியே வந்தபோது செய்தியாளர்கள் அங்கு கூடியிருந்தனர். அதைப் பார்த்து காரை நிறுத்திய ஜெயலலிதா அவர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் இன்று பிரதமர் தலைமையில் நடக்கிறது. அதில் பங்கேற்க டெல்லி செல்கிறேன். அக்கூட்டம் குறித்த கவனத்தில் மட்டுமே தற்போது நான் இருக்கிறேன்.
தேசிய அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட உங்களின் பிற கேள்விகளுக்குப் பின்னர் பதிலளிக்கிறேன் என்று கூறி விட்டுக் கிளம்பிச் சென்றார் ஜெயலலிதா.
முன்பு ஒருமுறை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு தர அதிமுக தயாராக இருப்பதாக ஜெயலலிதா சொல்லியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். அதாவது திமுக தரப்பிலிருந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நெருக்கடி வந்தபோது திமுக ஒருவேளை ஆதரவை வாபஸ் பெற்றால் நாங்கள் ஆதரிக்கத் தயார் என்று ஜெயலலிதா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.