பசிபிக் கடலில் 15 வாரங்களாக தத்தளித்த போலீஸ் அதிகாரியை காப்பாற்றிய சுறா மீன்
லண்டன்: பசிபிக் கடலில் மீன் பிடிக்க சென்று வழி தெரியாமல் 15 வாரங்களாக கடலில் தத்தளித்து கொண்டிருந்த இங்கிலாந்து போலீஸ் அதிகாரி ஒருவருக்கு சுறா மீன் உதவியால் கரை திரும்ப முடிந்ததாக தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்தவர் டோவ்காய் டெய்டோ(42). போலீஸ் அதிகாரியான இவர் தனது மைத்துனர் லெலு பைலலி உடன் சேர்ந்து பசிபிக் பெருங்கடலில் மீன் பிடிக்க சென்றார். படகில் கில்பர்ட் எலிஸ் தீவில் உள்ள தரவா பகுதியில் மீன் பிடித்து விட்டு, மெயினா தீவிற்கு வந்த போது, படகில் எரிப்பொருள் தீர்ந்துவிட்டது. இதனால் வேறு வழியின்றி இருவரும் படகிலேயே படுத்து உறங்கிவிட்டனர்.
சில வாரங்களாக இதே நிலையில் படகில் கிடந்த இருவரும் உணவின்றி தவித்தனர். இப்படியே 5 வாரங்கள் கடந்த போது, லெலு பைலலி வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். ஆனால் டோவ்காய் மட்டும் 15 வாரங்களாக படகில் கிடந்துள்ளார். கடலில் தத்தளித்த அவரை மீனவர்கள் காப்பாற்றினர். கடலில் இருந்து தப்பி வர தனக்கு ஒரு சுறா மீன் உதவியது என்று டோவ்காய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
மீண்டும் உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கையை இழந்த நான், செய்வதறியாமல் திகைத்தேன். உணவும், எரிப்பொருளும் இல்லாமல் அவதிப்பட்ட நிலையில், என்னுடன் வந்த உறவினர் இறந்துவி்ட்டார். தனிமையில் இருந்த நான் வெயிலுக்கு மறைவாக ஒரு துணியின் கீழே படுத்து உறங்கி கொண்டிருந்தேன்.
அப்போது நான் படுத்து உறங்கி கொண்டிருந்த படகின் முன் பகுதி பயங்கரமாக குலுங்கியது. திடுக்கிட்டு எழுந்து பார்த்த போது, 6 அடி நீளமுள்ள ஒரு சுறா மீன் எனது படகை உலுக்கி கொண்டிருந்தது. மேலும் படகை சுறா மீன் சுற்றி சுற்றி வந்தது. படகை மீண்டும் சுறா மீன் குலுக்கியதால், எனது மயக்கம் நீங்கியது.
அப்போது சுற்றிலும் பார்த்த போது, ஒரு கப்பல் ஒன்று சென்று கொண்டிருப்பது தெரிந்தது. என்னால் என் கண்களையே நம்ப முடியாத நிலையில், உதவி செய்யுமாறு கூச்சலிட்டு எனது கைகளை அசைத்து காட்டினேன். அப்போது எனது சத்தத்தை கேட்டு, கப்பல் ஊழியர்கள் தொலைநோக்கி வழியாக என்னை பார்த்தனர்.
அதன்பிறகு கப்பல் ஊழியர்கள் என்னை மீட்டனர். சுறா மீன் எனது கப்பலை உலுக்காமல் இருந்திருந்தால், நான் தூங்கி தொடர்ந்து கொண்டிருந்து இருப்பேன். மேலும் கப்பல் பணியாளர்களுக்கு, நான் ஆபத்தில் சிக்கிய இருப்பதை அறிந்திருக்கமாட்டார்கள். நானும் கடலில் அப்படியே கிடந்து இறந்திருப்பேன். ஒரு வகையில், சுறா மீன் தான் என்னை காப்பாற்றி உள்ளது என்றார்.