உதயகுமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: 'இந்து முன்னணி' ராமகோபாலன்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது. இந்த ஊர்வலத்தை இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் துவக்க வைக்க உள்ளார். இதற்காக பரமக்குடிக்கு வந்த ராம கோபாலன், கூடங்குளம் அணுஉலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உதயக்குமாரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
தமிழகத்தில் மிக்சி, கிரைண்டர், பேன் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கூட இதே நிலை தான் நீடிக்கிறது. இதற்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்.
தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து கிடைத்த வருமானம் ரூ.100 கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. கோவில் வாடகை வசூல் பாக்கி ரூ.200 கோடி உள்ளது. இதை உடனடியாக வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 3,444 கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் குத்தகை பாக்கி ரூ.33.3 கோடி வர வேண்டியுள்ளது.
கூடங்குளத்தில் அணுமின் நிலையம் துவங்க மத்திய, மாநில அரசுகள் ரூ.பல ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஓட்டு பெறுவதற்காக அணுமின் நிலையத்திற்கு எதிர்த்து தெரிவித்து வருபவர்கள் தேச விரோதிகள். இத்திட்டத்தை எதிர்க்கும் உதயகுமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
இந்து அறநிலைய துறையில் ஊழல் அதிகரித்து வருகிறது. மின்தடையால் தொழிற்சாலைகள் முடங்கி, விவசாயம் அழிந்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சமூக விரோதிகளை அடக்க நடவடிக்கை எதுவும் இல்லை. நம் நாட்டின் பல ஹெட்டேர் நிலப்பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது. அதை மீட்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பல இடங்களில் மதமாற்றம், ஆயுதபயிற்சி ஆகியவை நடைபெறுகிறது. இதன்மூலம் பெண்களை தேச விரோத செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர். இதை எதிர்த்து இந்து முன்னணி போராடும் என்றார்.