சங்கரன்கோவிலில் அதிமுக அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம்: எம்.எல்.ஏ. முத்துச்செல்வி மிஸ்ஸிங்
நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக இப்பொழுதே தயாராகி வருகிறது. நெல்லை மாவட்டம் தென்காசி நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் கால அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் சங்கரன்கோவிலில் உள்ள வைஷ்ணவி திருமண மகாலில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், கே.பி. முனிசாமி, ஆர்.வைத்தியலிங்கம், செந்தூர் பாண்டியன், ராஜேந்திர பாலாஜி, நத்தம் விஸ்வநாதன், எம்.எல்.ஏ.க்கள், அதிமுக நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கட்சி பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர்கள் கூறுகையில், பொதுத் தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தல்களிலும் அதிமுக அமோக வெற்றி பெற்றது போன்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்றனர்.
நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பேசுகையில்,
முதல்வரின் தொலைநோக்குத் திட்டத்தால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். நம் முதல்வர் கல்வித் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். கடந்த 15 மாத ஆட்சி காலத்தில் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற நாம் அயராது உழைக்க வேண்டும் என்றார்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.முனிசாமி பேசுகையில்,
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் கொடுத்து தேர்தல் வாக்குறுதிகளை உடனுக்குடன் நிறைவேற்றிய நம் அம்மாவின் சாதனைகளை எடுத்துக் கூறியே நாம் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் சங்கரன்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. முத்துச்செல்வியை காணவில்லை.