காவிரி பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை: புதிய பார்முலா சொல்கிறார் எஸ்.எம்.கிருஷ்ணா
காவிரி நதிநீர் பங்கீடு
தமிழகத்தின் விவசாயத் தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் தேவையான அளவு தண்ணீர் திறந்து விடுவதற்கு கர்நாடக மாநில அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் காவிரி நீர் பங்கீடு பிரச்சினை பற்றி கருத்து கூறியுள்ள எஸ்.எம். கிருஷ்ணா, நதிநீரை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக நீதிமன்றங்களை நாடாத் தேவையில்லை என்று கூறியுள்ளார். இப்பிரச்சினையில் இரு மாநிலங்களும் பேசி சுமூகமான முறையை நடைமுறைப்படுத்துவதே சிறந்த வழியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு 9000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கின் உத்தரவு படி அக்டோபர் 15 ம் தேதிவரை தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து கூறியுள்ள கிருஷ்ணா, கர்நாடக மாநிலத்தில் உள்ள பிலிகுண்டுவில் இருந்து தினமும் 4500 கன அடி தண்ணீர் தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும். மீதம் 4,500 கன அடி நீர், மற்ற அணைகளில் இருந்து வெளியாகும் நீர் கசிவு மூலம் தமிழகத்துக்குக் கிடைத்துவிடும் என்றும் அவர் ஆலோசனை கூறியுள்ளார்.
கர்நாடக அரசுக்கு ஆதரவு
காவிரி டெல்டா விவாசாயிகளின் நிலையை உணர்ந்து அவர்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டியது அவசியம் என்று கூறியுள்ள கிருஷ்ணா கர்நாடகாவில் பருவமழை முடிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக தமிழ்நாட்டில் பருவமழை தொடங்க உள்ளது. எனவே அணைகளில் நீர் இருப்பை கருத்தில் கொண்டு தமிழகம் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் காவிரி நதிநீர் பங்கீட்டு ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அதற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.