ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி கேட்கும் 'வருங்கால மத்திய அமைச்சர்' சிரஞ்சீவி!
ஹைதராபாத்: தனது ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளாராம் நடிகர் சிரஞ்சீவி. இவர் விரைவில் மத்திய அமைச்சராகப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் விலகி விட்டார் திரினமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி. இதையடுத்து ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பப் போகிறார் பிரதமர் மன்மோகன் சிங். இதுதொடர்பாக சோனியா காந்தியிடம் ஆலோசனை கேட்டு அமைச்சர்களை அறிவிக்கவுள்ளனர்.
அமைச்சரவை மாற்றத்தின்போது முன்னாள் பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் தலைவரும், தற்போது காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகியுள்ளவருமான சிரஞ்சீவிக்கும் ஒரு போஸ்ட் தரவுள்ளனர்.
இந்த நிலையில் கிரண் குமார் ரெட்டியை சந்தித்துப் பேசியுள்ளார் சிரஞ்சீவி. அப்போது தனக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைப்பது போல தனது ஆதரவாளர்களுக்கு மாநில அமைச்சரவையில் இடம் தர வேண்டும் என்று ரெட்டியைக் கேட்டுக் கொண்டார் சிரஞ்சீவி என்கிறார்கள்.
ஒரு வேளை அமைச்சர் பதவி கிடைக்காவிட்டாலும் கூட வாரியத் தலைவர் உள்ளிட்ட பதவிகளையாவது தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டு யார் யாருக்கு பதவி தரலாம் என்ற பட்டியலையும் கொடுத்து விட்டு வந்துள்ளாராம்.
ரெட்டியைச் சந்தித்து விட்டு வெளியே வந்த சிரஞ்சீவியிடம், நீங்கள் மத்திய அமைச்சராகப் போகிறீர்களாமே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,
இதுபற்றி எனக்கு எந்த தகவலும் வரவில்லை. எந்த பதவி கொடுத்தாலும் ஏற்க தயாராக இருக்கிறேன் என்றார் சிரஞ்சீவி.
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா...