நாட்டு மக்களுக்கு பிரதமர் அளித்த விளக்கம் "செம காமெடி": பால் தாக்கரே நக்கல்ஸ்
மும்பை: சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடுகளை அனுமதிப்பது தொடர்பான விவகாரம் குறித்து நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி மூலமாக விளக்கம் அளித்த பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சு சிரிக்கும்படி இருந்ததாக சிவ சேனா தலைவர் பால் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது கட்சி நாளிதழான சாம்னாவில் அவர் கூறியிருப்பதாவது,
சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடுகளை அனுமதிப்பது அவசியமானது என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜியை சம்மதிக்க வைக்கவே முடியவில்லை. கூட்டணி கட்சிகளே அன்னிய முதலீடு அவசியம் என்பதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அப்படி இருக்கையில் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு மிகவும் அவசியமானது என்று பிரதமரால் எப்படி மக்களை நம்ப வைக்க முடியும்.
இந்த விவகாரம் தொடர்பாக நாட்டில் உள்ள பல வர்த்தகர்கள் அரசு மீது அதிருப்தியில் உள்ளனர். பிரதமரின் கரம் வலுவானதா என்று நாம் கூற முடியாது. ஆனால் நாட்டு மக்கள் வலுவானவர்கள். அவர்கள் நிச்சயம் காங்கிரஸை ஆட்சியில் இருந்து அகற்றுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மரத்தில் பணம் காய்ப்பதில்லை என்று பிரதமர் கூறியது பற்றியும் தாக்கரே நக்கலடித்துள்ளார்.