மண் குவாரி மோசடி... மகனுடன் பொன்முடி தலைமறைவு: சென்னை விரைந்தது தனிப்படை!
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாசில்தார் குமாரபாலன், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, செம்மண் குவாரிகளில் அரசு அனுமதித்த அளவை விட கூடுதலாக செம்மண் அள்ளிதாக தெரிவித்திருந்தார்.
இது குறித்து அவர் அந்த புகாரில் கூறியதாவது,
வானூர் தாலுகா, பூத்துறை கிராமத்தில் 5 செம்மண் குவாரிகள், முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, விழுப்புரம் அருகே உள்ள பள்ளியந்தூர் ஜெயச்சந்திரன், கவுதசிகாமணியின் மைத்துனர் ராஜமகேந்திரன் ஆகியோர் பெயர்களில் உரிமம் பெற்று நடைபெற்று வருகிறது.
இந்த குவாரிகளில் 20 அடி வரை தோண்டி செம்மண் அள்ளிக் கொள்ள அரசு அனுமதித்தது. ஆனால் அரசு அனுமதித்த அளவை மீறி சுமார் 70 அடி வரை தோண்டப்பட்டு செம்மண் அள்ளப்பட்டுள்ளது. எனவே அரசிற்கு இழப்பீடு ஏற்படும் வகையில் ரூ.28 கோடியே 37 லட்சம் மதிப்புள்ள 2 லட்சத்து 46 ஆயிரம் யூனிட் அளவுள்ள செம்மண் அள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, பள்ளியந்தூர் ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன் ஆகிய 4 பேர் உட்பட பலர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 353 (அரசு பணியை செய்யவிடாமல் தடுத்தல்), 506(1) மிரட்டுதல்), 406 (நம்பிக்கை மோசடி), 420 (ஏமாற்றுதல்), 379 (திருட்டு), 120(பி) (கூட்டு சதி) மற்றும் கனிமவள தடை சட்டத்தின் கீழும் வழக்குகள் பதிவு செய்தனர்.
இவ்வழக்குகள் தொடர்பாக பள்ளியந்தூர் ஜெயச்சந்திரனை, போலீசார் கைது செய்து விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் காவலில் வைக்குமாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் செம்மண் மோசடி வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் பொன்முடி உட்பட 3 பேரை பிடிக்க மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், விழுப்புரம் நிலமோசடி பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராஜ் ஆகியோர் தலைமையில் 3 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் தலைமறைவு?
இதையடுத்து பொன்முடியும், அவரது மகனும் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் சென்னையில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனிப்படையினர் சென்னைக்கு விரைந்துள்ளனர்.
பொன்முடி மீதான இந்தப் புதிய வழக்கு திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.