என்னது 'கரண்ட்' செத்துப் போச்சா....!!!
கடந்த திமுக ஆட்சியின்போது சில மணி நேரங்களாக இரு்நத மின்தடை தற்போதைய அதிமுகஆட்சியில் பல மணி நேரமாக மாறியுள்ளது. சில பகுதிகளில் காலவரையின்றி மின் தடையும் இருந்து வருகிறது. மக்களின் உயிரைக் குடித்து வரும் இந்த மின்தடையால் மக்கள் படும் அவதியை சொல்லில் வடிக்க முடியாது.
சட்னி அரைக்க முடியவில்லை, ஜூஸ் போட்டுக் குடிக்க முடியவில்லை. டிவி பார்க்க முடியவில்லை. பேனில் காற்று வாங்க முடியவில்லை, அட ஒரு டிவி சீரியலைக் கூட ஒழுங்காக பார்க்க முடிவதில்லை. எங்கு பார்த்தாலும் மின் வெட்டு மின்வெட்டு மின்வெட்டுதான்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஒரு நூதன போஸ்டரை அடித்து ஒட்டி பரபரப்பைக் கிளப்பியுள்ளனர் சிலர்.
மின்சாரம் செத்துப் போய் விட்டதாக கூறி கண்ணீர் அஞ்சலி என்று தலைப்பிட்டு பிறப்பு என்ற வார்த்தைக்குப் பதில் தொழில் போச்சு என்ற வார்த்தையும், இறப்புக்குப் பதில் தூக்கம் போச்சு என்றும் போட்டுள்ளனர்.
அதன் கீழே, சென்னையில் ஒரு மணி நேரம் மின்வெட்டு அறந்தையில் 12 மணி நேரமா?
எங்களையெல்லாம் தொழில் செய்ய விடாமல், இரவில் தூங்கவும் விடாமல், பெருந்துயரத்தில் விட்டுச் சென்றிருக்கும் மின்சாரமே, உனக்கு எங்களின் கண்ணீர் அஞ்சலி என்று போட்டுள்ளனர்.
இந்த வித்தியாசமான போஸ்டரை அறந்தாங்கி மண்டல போட்டோ மற்றும் வீடியோகிராபர்கள் சங்கம் ஒட்டியுள்ளது. இவர்கள் நாளை செவ்வாய் கிழமை உண்ணாவிரத போராட்டமும் அறிவித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
இந்தப் போஸ்டர்தான் இன்று அறந்தாங்கியில் சூடான விஷயமாக மாறியுள்ளது.