சென்னை ஏர்போர்ட்டில் விமானம் மீது டிராக்டர் மோதி விபத்து: 48 பயணிகள் தப்பினர்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமானம் மீது பயணிகளின் சரக்குகளை ஏற்றி செல்லும் டிராக்டர் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 48 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்.
சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமானம்(ஐடி-2494), இன்று காலையில் புறப்பட தயாராக இருந்தது. இதில் பயணிப்பதற்காக 48 பயணிகள் விமான நிலையத்தில் சோதனை முடித்து, விமானத்தில் அமர்ந்திருந்தனர்.
விமானம் பார்க்கிங் பகுதியில் இருந்து ஓடுப்பாதையில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது பயணிகளின் சரக்குகளை விமானத்தில் ஏற்றுவதற்காக எடுத்து வந்த டிராக்டர், எதிர்பாராதவிதமாக ஓடுதளத்தில் நின்ற விமானம் மீது மோதியது.
இதில் விமானம் பயங்கரமாக குலுங்கியதால், உள்ளே இருந்த பயணிகள் பயத்தில் அலறினர். விமானத்தின் வலதுபுற இறக்கை சேதமடைந்ததால், பயணிகள் உடனடியாக கீழே இறக்கப்பட்டனர். பயணிகள் மற்றொரு விமானத்தின் மூலம் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சேதமடைந்த விமானத்தின் பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. டிராக்டர் விமானத்தின் பக்கவாட்டில் மோதியதால், பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.