காஷ்மீர் ஐ.நா.வின் தோல்வியின் அடையாளம்: பாக். அதிபர் சர்தாரி குசும்பு
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியும், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கரும் ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயார்க் சென்றுள்ளனர்.
ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொண்ட சர்தாரி பேசியதாவது,
இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுக்கிடையேயான உறவு நல்லபடியாக உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் நான் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை 5 முறை சந்தித்து பேசியுள்ளேன்.
ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்கள் விதியை தேர்வு செய்ய நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம். ஐ.நா.வின் தோல்வியின் அடையாளமாகத் தான் காஷ்மீர் உள்ளது. ஒத்துழைப்பு மூலமே காஷ்மீர் விவகாரத்தை தீர்க்க முடியும்.
தீவிரவாதத்தை எதிர்த்து போராடி பாகிஸ்தான் கஷ்டப்படுவது போன்று வேறு எந்த நாடும், மக்களும் கஷ்டப்பட்டிருக்க முடியாது. தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுபவர்களுக்கு நான் பணிவுடன் ஒன்றைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தயவு செய்து இறந்த எம்மக்களின் நினைவை இழிவுபடுத்தாதீர்கள். மேலும் வாழும் மக்களின் வலியை அதிகரிக்காதீர்கள்.
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள படம், பிரான்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள கார்ட்டூன்களை உலகம் முழுவதும் தடை செய்ய வேண்டும்.
பாகிஸ்தானைப் பற்றி பல கேள்விகள் கேட்கின்றனர். (இது குறித்து பேசுகையில் குரலை உயர்த்தினார்). பாகிஸ்தான் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்க நான் இங்கு வரவில்லை. பாகிஸ்தான் மக்கள் அவற்றுக்கு ஏற்கனவே பதில் அளித்துவிட்டனர். பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் பதில் அளித்துவிட்டனர். பாகிஸ்தான் வீரர்கள் பதில் அளித்துவி்ட்டனர்.
இதுவரை 7,000 பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் போலீசார், கிட்டத்தட்ட 37,000 அப்பாவி மக்களை இழந்துள்ளோம். எனது வாழ்விலும் இழப்பின் தழும்பு உள்ளது என்பதை நான் நினைவுபடுத்தத் தேவையில்லை என்றார்.