தேர்தல் பிரச்சாரத்திற்கு விலங்குகளை பயன்படுத்த கூடாது: ஆணையம் உத்தரவு
சென்னை: தேர்தல் பிரச்சாரத்திற்கு விலங்குகளை பயன்படுத்த கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சியினர் விலங்குகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று இந்திய பிராணிகள் நல அமைப்பு (பீட்டா), இந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்று, தேர்தல் பிரச்சாரத்திற்கு விலங்குகளை பயன்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியி்ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தேர்தல் பிரச்சாரத்தின் போது சில அமைப்புகள், குதிரை, கழுதை, யானை, ஒட்டகம், எருது ஆகிய விலங்குகளை துன்புறுத்துவதாக தேர்தல் ஆணையத்திற்கு தெரியவந்துள்ளது.
விலங்குகளால் சுமக்க முடிந்த அளவிற்கு அதிகமான பாரம் சுமக்க வைப்பது, நீண்டநேரம் விலங்குகளை வேலை வாங்குவது, விலங்குகளின் மீது கட்சியின் பெயர், கொள்கை, சின்னம் ஆகியவற்றை வரைவது ஆகிய செயல்கள், விலங்குகளை துன்புறுத்துதல் தடுப்பு சட்டம் 1960, வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 ஆகிய சட்டங்களின் கீழ் குற்றமாகும்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்தப்படும் கழுதை, யானை போன்ற விலங்குகள் அடித்து துன்புறுத்தப்படுகின்றன. மேலும் அதிக சுமையேற்றியும், குடிநீர், உணவு ஆகியவை இன்றியும் துன்புறுத்தப்படுகிறது. விலங்குகளுக்கு ஏற்படும் காயம் மற்றும் புண்களை யாரும் கண்டுகொள்வதில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்திற்கு விலங்குகளை பயன்படுத்த கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை, பீட்டா அமைப்பு வரவேற்றுள்ளது.
இது குறித்து இந்திய பீட்டா அமைப்பின் கால்நடை துறை இயக்குனர் மணிலால் வாலியட் கூறியதாவது,
இந்த உத்தரவு விலங்குகளுக்கு கிடைத்த மிக பெரிய வெற்றியாகும். தேர்தல் நேரங்களில் விலங்குகளை கொடூரமான முறையில் நடத்துவது இதன் மூலம் தடுக்கப்படும். விலங்குகள் எந்த கட்சிகளையும் ஆதரிப்பதில்லை. எனவே தேர்தல் பிரச்சாரத்தின் போது அவை துன்புறுத்தப்படுவது தவறாகும் என்றார்.