'மகா.' நெருக்கடி, அமைச்சரவை மாற்றம்.. கூடுகிறது ஐமுகூ ஒருங்கிணைப்புக் கூட்டம்
டெல்லி: மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு அஜீத் பவார் குரூப்பால் ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி, அமைச்சரவை மாற்றம் உள்ளிட்ட பரபரப்பான பின்னணியில் இன்று சோனியா காந்தி தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
கூட்டணியை விட்டு திரினமூல் காங்கிரஸ் விலகிப் போன பின்னர் நடைபெறும் முதல் கூட்டம் இது என்பதால் எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சிசயால் ஏற்பட்டுள்ள பெரும் பிரச்சினையின் பின்னணியில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. பெரும் ஊழல் புகார்கள், நிதி மோசடிப் புகார்களில் சிக்கியதால், துணை முதல்வராக இருக்கும் சரத் பவாரின் அண்ணன் மகன் அஜீத் பவார் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். மேலும் அவருக்கு ஆதரவாக பவார் கட்சி அமைச்சர்களும் விலகுவதாக தெரிவித்துள்ளனர். சுயேச்சைகள் 13 பேரும் ஆதரவுக் குரல் எழுப்பியுள்ளனர். எனவே காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு அங்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கூட்டம் நடைபெறுகிறது. இருப்பினும் அஜீத் பவார் விவகாரம் இன்றைய கூட்டத்தில் எழுப்பப்படாது என்று மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான பிரபுல் படேல் கூறியுள்ளார்.
இந்தப் பிரச்சினை தவிர அமைச்சரவை மாற்றம் வேறு விரைவில் வரவுள்ளது. அதுகுறித்தும் கூட்டத்தில் பேசப்படலாம் என்று தெரிகிறது. மேலும், பிரதமரின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எழுப்பி வரும் போர்க்குரலுக்குப் பதிலடியாக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரு சேர பதில் குரல் எழுப்புவது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கோஷ்டிப் பூசலை விட்ருங்க.. ராகுல் காந்தி கோரிக்கை
இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி அங்கு கட்சியினர் மத்தியில் பேசும்போது கோஷ்டிப் பூசலை சுட்டிக் காட்டி அறிவுரைகளைக் கூறிப் பேசினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மாநில காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப் பூசல் இல்லாதிருந்தால் குறைந்தபட்சம் 25 முதல் 30 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்திருக்க வேண்டும். கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் தொண்டர்கள் தீவிரம் காட்ட வேண்டும். அப்போதுதான் இப்போது ஆட்சியில் உள்ள அரசை அகற்றுவதற்கு மக்கள் மனதளவில் தயாராவார்கள்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் அரசு பதவிக்கு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை கட்சியினர் எடுக்க வேண்டும். கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் துணிச்சலோடு செயல்பட வேண்டும் என்றார் அவர்