டிஎன்பிஎஸ்சி மூலம் இதுவரை 43 லட்சம் பேருக்கு வேலை: நட்ராஜ்
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக இதுவரை 43 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாக தேர்வாணய தலைவர் நட்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய(டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் நட்ராஜ் கூறுகையில்,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இதுவரை 43 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இந்த அளவுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. வரும் 30ம் தேதி நடக்கும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு சுமார் 9 லட்சத்து 50,000 பேர் விண்ணப்பி்த்துள்ளனர். இந்த தேர்வுக்காக மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்போது தற்காலிகமாக சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள வணிகவரித்துறை இணைப்புக் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்வாணையத்திற்கு என்று ரூ.19.86 கோடி செலவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பாரிமுனை பேருந்து நிலையம் அருகே உள்ள வஉசி நகர், ப்ரேஸர் பாலச் சாலையில் 1,25,000 சதுர அடி பரப்பளவில் 6 மாடி புதுக்கட்டிடம் கட்டப்பட்டது.
இந்த புதிய கட்டிடத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார். புதிய கட்டிடத்தின் 6வது மாடியில் உள்ள நவீன வசதிகளுடன் கூடிய மாநாட்டுக் கூடத்தை அவர் பார்வையிட்டார். இக்கட்டிடத்தில் ஒலி-ஒளி காட்சி அமைப்பு வசதி, காணொலிக் காட்சி, 2 மாநாட்டுக் கூடங்கள், இணையவழித் தேர்வுக்கூடம், நவீன வசதிகளுடன் கூடிய நேர்காணல் அறைகள், தகவல் மற்றும் குறைதீர் மையம், அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய மதிப்பீட்டு அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.