திண்டிவனத்தில் லாரி மீது கார் மோதி விபத்து: பேராசிரியர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
திண்டிவனம்: திண்டிவனத்தில் இன்று காலையில் கேஸ் சிலிண்டர் லோடு ஏற்றி வந்த லாரியுடன், கார் ஒன்று மோதியது. இதில் காரில் பயணித்த அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் அவரது மகன், மனைவி ஆகியோர் பலியாகினர். மேலும் பேராசிரியரின் மற்றொரு மகனும், கார் ஓட்டுநரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை அடுத்த உடையார்குடி கிராமத்தை சேர்ந்தவர் செய்யது சையத் ஜாபர்(50). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மேலாண்மை துறையின் தலைவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஷகிரா பானு(45), மகன்கள் அஜீஸ்(12), அப்சல்(8). ஷகிரா பானுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.
இதனால் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக, இன்று அதிகாலையில் 4 பேரும் காரில் சென்னைக்கு கிளம்பினர். காரை உடையார்குடி பெரியார் நகரை சேர்ந்த டிரைவர் பைசல்(22) ஓட்டினார். அதிகாலை 5 மணியளவில் கார் திண்டிவனத்தை அடுத்த சலாவதி என்ற இடத்திற்கு வந்த போது, டிரைவர் தூங்கியதாக தெரிகிறது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கார், தேசிய நெடுஞ்சாலையில் இருந்த சென்டர் மீடியனை கடந்து வேகமாக ஓடியது. அப்போது எதிரே வந்த சென்னை படாளத்தில் இருந்து திருக்கோவிலூருக்கு கேஸ் சிலிண்டர் லோடு ஏற்றிய லாரி மீது கார் மோதியது. இதில் கார் அப்பளம் போல நெருங்கியது.
விபத்து சத்தம் கேட்டு அப்பகுதியினர் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். மேலும் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
காரில் பயணித்த சையத் ஜாபர், அவரது மனைவி ஷகிரா பானு, மகன் அப்சல் ஆகியோர் உடல் நசுங்கி பலியாகி இருந்தனர். படுகாயமடைந்த டிரைவர் பைசல் மற்றும் அஜீஸ் ஆகியோர் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் அஜ்ஸின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இது குறித்து ரோசனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் லாரியில் இருந்து கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறவில்லை. இதனால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.