காத்மாண்டிலிருந்து புறப்பட்ட 2-வது நிமிடத்தில் விபத்துக்குள்ளான விமானம் - 19 பேர் பலி
காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து சிதா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் 16 பயணிகள் மற்றும் 3 விமான நிறுவன ஊழியர்களுடன் எவரெஸ்ட் சிகர பகுதியான லுக்லா நகரை நோக்கி சென்றது. லுக்லாதான் எவரெஸ்ட் சிகரப் பகுதிக்கு செல்வதற்கான நுழைவு வாயிலாகும்.
காத்மாண்டில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்ட 2-வது நிமிடத்தில் திடீரென விமானத்தில் தீப்பிடித்தது. விமான நிலையத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் தீப்பிடித்த விமானம் வெடித்து சிதறியது.
இந்தக் கோர விபத்தில், விமானத்தில் இருந்த 19 பயணிகளும் பலியாகினர். விமானம் தீப் பிடித்தபோது அருகில் ஓடிக் கொண்டிருந்த ஆற்றின் கரையோரத்தில் பாதுகாப்பாக இறக்க விமானி முயற்சித்திருக்கிறார். ஆனால் அம்முயற்சி பலனளிக்காமல் விமானம் வெடித்திருக்கிறது.
இந்த விமான விபத்தில் உயிரிழந்த 16 பயணிகளில் 4 நேபாள நாட்டவர், 7 பேர் இங்கிலாந்துக்காரர்கள், 5 பேர் சீனர்கள். 3 விமான ஊழியர்கள் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். நேபாள ராணுவம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டது.
பறவை மோதியதால்தான் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பறவை மோதியதில் விமான என்ஜின் பழுதடைந்த அபரிதமான வெப்பத்தை உருவாக்கி விட்டது. இதனால்தான் விமானம் வெடித்துச் சிதறியதாக தெரிகிறது.