தாவூத்தின் தாய், சகோதரி வீடுகளை பறிமுதல் செய்தது செல்லும்: டெல்லி நீதிமன்றம்
டெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் தாயார் மற்றும் சகோதரியின் சொத்துகளை பறிமுதல் செய்தது செல்லும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் குடும்பத்தினருக்கு மும்பையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. தாவூத்தின் தாயார் அமினா பாய், சகோதரி ஹசீனா இப்ராகிம் பர்கர் ஆகியோர் பெயரில் தெற்கு மும்பை நாக்பாடாவில் பல குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளன.
சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் வாங்கிக் குவித்த இந்த 7 வீடுகளையும் பறிமுதல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தாவூத்தின் தாயாரும் சகோதரியும் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற ஒருநீதிபதி பெஞ்ச், பறிமுதல் உத்தரவு சரியே என்று தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு துர்ரேஷ் அகமது, சித்தார்த் மிர்துல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. சட்டவிரோதமாக சம்பாதித்த வீடுகளை மத்திய அரசு பறிமுதல் செய்தது சரியே என்றும் இதற்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.