வாஜ்பாயின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஸ் மிஸ்ரா மரணம்
அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முதன் முதலில் நியமிக்கப்பட்ட பிரிஜேஸ் மிஸ்ரா, வாஜ்பாயின் முதன்மை செயலாளராகவும் இருந்துள்ளார்.
1928ம் ஆண்டு செப்டம்பர் 29 ம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் பிரஜேஸ் மிஸ்ரா பிறந்தார். அவரது தந்தை துவாரகா பிரசாத் மிஸ்ரா காங்கிரஸ் கட்சியில் சிறந்த தலைவராக இருந்தவர். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியிடம் நெருக்கமாக இருந்தவர். மத்தியபிரதேச மாநிலத்தின் முதலமைச்சராகவும் இருந்துள்ளார்.
தந்தை காங்கிரஸ்காரராக இருந்தாலும் 1991ம் ஆண்டு பாஜகாவில் இணைந்த பிரஜேஸ் மிஸ்ரா வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர். உள்நாட்டு, வெளிநாட்டு விவகாரங்களில் சிறப்பான பணிக்களை செய்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான், இந்தியா-சீனா, இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவுகளை சிறந்த ராஜதந்திர முறையை கையாண்டுள்ளார்.
1998ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அவர்களால் நியமிக்கப்பட்டார் 2004ம் ஆண்டுவரை அந்த பதவியை வகித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டனி ஆட்சி காலத்தில் மிஸ்ராவின் பணி சிறப்பு வாய்ந்ததாக இருந்துள்ளது. வெளியுறவுக் கொள்கையில் சிறந்த ராஜதந்திரியாக இருந்த அவர், 1998ம் ஆண்டு மே மாதம் இந்தியா நடத்திய அணுகுண்டு சோதனையின் போது முக்கிய பங்காற்றினார்.
செப்டம்பர் 29 ம் தேதியான இன்று பிரஜேஸ் மிஸ்ரா 85 வது பிறந்த நாள் கொண்டாட இருந்த நிலையில் நேற்று அவர் மயங்கிய நிலையில் வீட்டில் இருந்தார். இதனையடுத்து டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.