சபரிமலை பக்தர்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்க கூடாது: கேரள முதல்வர்
திருவனந்தபுரம்: சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்க கூடாது என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் புலிகள் சரணாலயம் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள கோயில்களில் பக்தர்கள் செல்ல கட்டுப்பாடு விதிப்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இதை குறித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சபரிமலை தேவஸ்வசம் வாரியம் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் முடிவில், சபரிமலை பக்தர்களால் புலிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து கேரள மாநில வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சபரிமலை கோவில் மிகவும் பழையானது. இப்பகுதியில் புலிகள் சரணாலயம் அமைக்கப்படுவதற்கு முன்பே, இந்த கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர். சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்வதால், புலிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
சபரிமலை கோயில் தொடர்பான அனைத்து விஷயங்களும் உச்சநீதிமன்றத்துக்கு தெரியும். சபரிமலை கோவிலில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு செய்ய வேண்டிய அபிவிருத்தி பணிகள் தொடர்பான மாஸ்டர் பிளான் உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் தான் தயாரிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை கோயில் வளர்ச்சிக்காக புலிகள் சரணாலயம் பகுதியில் இருந்து உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன் 12.67 ஹெக்டேர் வனப்பகுதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2003ம் ஆண்டு சபரிமலை கோவிலில் ஆய்வு நடத்திய புத்த சிங் தலைமையிலான பொது கணக்குகள் கமிட்டி, சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு தகுந்த வசதிகளை செய்து தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டினார். எனவே சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்க கூடாது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் அனுப்பி உள்ள நோட்டீஸிற்கு, வரும் 1ம் தேதி கேரள அரசு தரப்பில் மேற்கண்ட கருத்துகள் அடங்கிய பதில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.