சோனியா யு.எஸ். சென்று வந்ததும் அன்னிய முதலீடுக்கு அனுமதி அளித்தது ஏன்?: மோடி கேள்வி
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமெரிக்கா சென்று வந்த பின் சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்தில் சிகிச்சைகாக சோனியா அமெரிக்கா சென்று திரும்பினார்.
இந் நிலையில் ஹரியாணா மாநிலம் சூரஜ்குண்ட் நகரில் நடந்த பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி,
நிலக்கரி சுரங்கங்களை ஓதுக்கீடு செய்ததில் காங்கிரஸ் வரலாறு காணாத ஊழல் செய்துள்ளது. சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது படேல் பரிந்துரையின் பேரில்தான் பல நிலக்கரி சுரங்கங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் வெளியானதும் அவர் தனது பரிந்துரைகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். வெளிநாட்டு பத்திரிகை ஒன்று இதை அம்பலப்படுத்தியுள்ளது. இதற்கு சோனியா விளக்கம் அளிக்க வேண்டும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விவசாயிகள், சிறு வியாபாரிகள் நலனுக்கு எதிரானதான மாறி விட்டது. சோனியாதான் இதன் பின்னணியில் உள்ளார். சோனியா சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்தார். மறுநாளே சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
பிரதமர் மன்மோகன் சிங் அவர்களே.. உங்களுக்கு என்ன தான் பிரச்சனை?. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை நீங்கள் அனுமதித்ததற்கு என்ன காரணம்? பொதுவாக நீங்கள் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடக்கும் காலங்களில் மட்டும் சுறுசுறுப்பாக இருப்பது ஏன்? அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?, இதை நீங்கள்தான் விளக்க வேண்டும்.
நமது பிரதமர் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு மாட்டு இறைச்சியை ஏற்றுமதி செய்வதில்தான் ஆர்வமாக உள்ளார்.
இந்த 8 வருட ஆட்சியில் இரண்டே இரண்டு முறை தான் சிங்கமாக மாறினார் மன்மோகன் சிங். முதலில் அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் செய்த போது, இரண்டாவதாக அன்னிய முதலீட்டை அனுமதிக்கும்போது என்றார் மோடி.
இதன்மூலம் அமெரிக்க நெருக்கடியால் தான் சில்லறை வணிகத்தில் இந்தியா அன்னிய முதலீட்டை அனுமதித்துள்ளது என்று மோடி குற்றம் சாட்டியுள்ளார்.