'செம்மண் கொள்ளை': மகனுடன் தப்பியோடிய பொன்முடி.. ஆந்திராவில் மாமியார் வீட்டில் பதுங்கல்?
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டாட்சியர் குமரபாலன் கொடுத்த புகாரின் பேரில் பொன்முடி, அவரது மகன் கெளதம சிகாமணி உள்ளிட்ட பலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் பொன்முடியின் கூட்டாளியான ஜெயச்சந்திரன் என்பவர் மட்டும் போலீசில் பிடிபட்டார். பொன்முடியும் அவரது மகன் சிகாமணியும் தொடர்ந்தும் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
ஆந்திராவில் பதுங்கல்
இருவரும் தமிழக- ஆந்திரா எல்லையில் உள்ள பொன்முடியின் மாமியார் வீட்டில் பதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆந்திராவில் உள்ள மாமியார் ஊரில் உள்ள தோட்டத்துக்கு விழுப்புரத்தில் இருந்து ஆட்களை அனுப்புவதற்காகவே தனியே ஒரு அரசுப் பேருந்தையே தமது அமைச்சர் பொறுப்பு காலத்தில் விட்டவர்தான் பொன்முடி என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மாமியார் வீடு அல்லது அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிச்சயம் பொன்முடி பதுங்கியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். முன்னர் சென்னையில் இருப்பதாகக் கூறப்பட்டாலும் அது பொன்முடி கிளப்பிவிட்ட நாடகம் என்றும் போலீசார் கூறுகின்றனர். பொன்முடியை எப்படியும் வளைத்துப் பிடிக்க அவரது ஆதரவாளர்களை முதல் கட்டமாக போலீஸ் தூக்கியுள்ளது.
நெருக்கமான கோத.குமார் கைது
பொன்முடிக்கு வலது, இடது கரங்களாக செயல்பட்டவர்களிடம் நேற்று விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் பொன்முடிக்கு மிகவும் நெருக்கமானவரும், கல்வி நிறுவன அதிபருமான கோத.குமாரின் நன்னாடு கிராமத்துக்கு நேற்று நள்ளிரவு போலீசார் சென்றிருந்தனர். சென்னையிலிருந்து நேற்றுதான் அவர் ஊர் திரும்பியதாகக் கிடைத்த தகவலையடுத்து அவர் விழுப்புரம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. பொன்முடி மற்றும் அவரது மகனின் இருப்பிடம் பற்றி துருவித் துருவி கேள்வி கேட்டனர். இன்றும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இதனால் திமுகவினர் விழுப்புரம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் சுமார் 14 மணிநேர விசாரணைக்குப் பிறகு கோத.குமார் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர் பொன்முடியை சந்தித்திருப்பதாகவும் பொன்முடியின் சில மூவ்கள் பற்றி சொல்லியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பொன்முடி, அவரது மகன் மீதான செம்மண் கொள்ளை வழக்கில் ஏற்கெனவே ஜெயச்சந்திரன் என்பவர் சிக்கினார். தற்பொழுது கோத. குமார் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.