அமெரிக்காவில் கூட பட்டினி சாவு உள்ளது-ஆனா தமிழகத்தில் இல்லை: ஓ.பி
திருச்சி: அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட இன்னும் பட்டினி சாவுகள் நடைபெறுகிறது. ஆனால் தமிழகத்தில் அந்த வார்த்தைக்கு இடம் இல்லாமல் செய்தவர் முதல்வர் ஜெயலலிதா என்று தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவுபடி திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம், திருச்சி ஜங்சன் அரிஸ்டோ எல்.கே.எஸ்.மஹாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அதிமுக புறநகர் மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான என்.ஆர்.சிவபதி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் அதிமுக கட்சியின் பொருளாளரும், நிதியமைச்சருமான பன்னீர் செல்வம் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் அவர் கூறியதாவது,
திருச்சி மாவட்டத்தில் எப்போது தேர்தல் நடைபெற்றாலும், யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற பணியாற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இக்கூட்டத்தின் வாயிலாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அனைத்து தரப்பட்ட மக்களும் பாராட்டும் வகையில் ஆட்சி நடத்திவரும் ஒரே தலைவர் நமது முதல்வர் ஜெயலலிதா மட்டுமே. கடந்த 1972ம் ஆண்டு அதிமுக இயக்கத்தை எந்த நோக்கத்திற்காக எம்.ஜி.ஆர். தொடங்கினாரோ, அந்த நோக்கத்தை சிந்தாமல் சிதறாமல் இன்று வரை கட்டி காத்து வருகிறார்.
தமிழகத்தை 11 ஆண்டுகள் எம்.ஜி.ஆர். ஆட்சி செய்தார். தற்போது முதல்வர் ஜெயலலிதா 11வது ஆண்டு ஆட்சி செய்து வருகிறார். தமிழக வரலாற்றில் அதிமுக கட்சி மட்டும்தான் 23 ஆண்டு காலம் ஆட்சி செய்த பெருமையை பெற்றுள்ளது.
பாராளுமன்றத்திற்கு எப்பொழுது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம். எனவே அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள், முனைப்புடன் செயல்பட்டு 40 தொகுதிகளையும் கைப்பற்றி முதல்வர் ஜெயலலிதா காலடியில் சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கொடுத்த உறுதிமொழிகளை இன்று வரை செயல்படுத்தி மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளார். அதற்கு எடுத்துக்காட்டாக அனைத்து குடும்ப தாரார்களுக்கும் இலவசமாக மாதம் 20 கிலோ அரிசி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதை கூறலாம்.
முதல்வர் பொருளாதாரத்தை நன்கு அறிந்து செயல்பட கூடியவர். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இன்னும் பட்டினி சாவுகள் நடைபெற்று வருகிறது. ஆனால் தமிழகத்தில் அந்த வார்த்தைக்கே இடம் இல்லாமல் செய்தவர் முதல்வர் ஜெயலலிதா.
மத்திய அரசு தமிழகத்தை எந்த அளவிற்கு தட்டிக்கழிக்க முடியுமோ, அந்த அளவிற்கு தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மின்சாரம், மண்ணெண்ணை, தண்ணீர் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் செவி சாய்க்காமல் தட்டி கழித்து வருகிறது. அதையும் தாண்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா அனைத்து பிரச்சனையும் சமாளித்து தமிழகத்தை சிறப்பாக நடத்தி கொண்டிருக்கிறார் என்றார்.