கோவில் குளங்கள் ஆக்கிரமிப்பை அகற்றி மழைநீரை சேகரிக்க வேண்டும்: ராம.கோபாலன்
சென்னை: தமிழகத்தில் நிலத்தடி நீரை உயர்த்தும் வகையில், கோவில் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீரை சேகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தின் முக்கிய தேவை தண்ணீரும், மின்சாரமும் ஆகும். இவற்றின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது. அதற்கேற்ப அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். இதை உணர்ந்து முதல்வர் ஜெயலலிதா இன்னும் 10 நாளில் வர இருக்கும் வடகிழக்கு பருவ மழையின் நீரை சேகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளதை இந்து முன்னணி வரவேற்கிறது, பாராட்டுகிறது.
மழைநீர் கால்வாய் சென்னை மாநகரில் ஏற்படுத்தப்பட்டாலும் அது செயலிழந்த நிலையில் உள்ளது. மழைநீர் கால்வாய்களில் குப்பைக் கூளங்களும், சாலையில் ஓடும் சாக்கடை நீரும் கலந்து வருகிறது. இதனால் மழைநீர் கால்வாய், கொசு உற்பத்தியை பெருக்கி வருகிறது. இதில் உள்ள மண், சகதிகளை வெளியேற்ற சென்னை மாநகராட்சி, ரூ.பல லட்சம் செலவு செய்தாலும் அது முழு பயனை தருவதில்லை. என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் பெய்யும் மழை நீரில் பெரும்பகுதி வீணாக கடலில் சென்று கலக்கிறது. இதற்கு காரணம் சாலையோரம் உள்ள குளம், ஏரிகளை ஆக்கிரமித்து மூடியுள்ளது தான். மழைநீர் வீடுகளில் விழுவதைவிட சாலையில் தான் பெருக்கெடுத்து ஓடுகிறது. இவற்றை சேகரிக்க நமது முன்னோர்கள் ஏரி, குளங்களை வெட்டி வைத்தனர். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீர்நிலைகளை ஏற்படுத்துவது பெரும் புண்ணிய செயல் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் இன்றோ கோடிகளுக்கு ஆசைப்பட்ட அரசியல்வாதிகள், தங்களின் செல்வாக்கால் அவை புறம்போக்கு நிலங்களாகவும், கட்டிடங்களாகவும் மாறிவிட்டன. மழைநீரை எவ்வளவு வேகமாக கடலைச் சென்றடைய வைக்கலாம் என்றே அதிகாரிகள் திட்டமிடுகின்றனர்.
உதாரணமாக வடபழனி வேங்கீஸ்வரர் ஆலயத்தில் இருந்த குளத்தை முழுவதுமாக மூடி, கடைகளை கட்டிவிட்டார்கள். இது குறித்து இந்து முன்னணி பல ஆண்டுகளாக தொடர் போராட்டம் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது. ஆனால் தமிழக அரசு, ஆக்கிரமிப்பை தடுக்க தவறியது.
அதுபோல சென்னை கொளத்தூர் சிவன் கோவில் குளம், ரெட்டேரி ஆகியவை ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இந்த அநியாயத்தை அரசும், அதிகாரிகளும் தடுத்து நிறுத்த வேண்டும் மழை நீர் உயிர் நீர்' என்று வாகனங்களில் எழுதினால் மட்டும் போதாது; நமது உள்ளங்களில் உணர்ந்து செயல்பட அரசு முன் மாதிரியாக நடந்து காட்ட வேண்டும்.
முதல்வரின் உத்தரவை அதிகாரிகள் தீவிரமாக செயல்படுத்தி, மழைநீரை சேமிக்க உரிய நடவடிக்கை எடுத்து தமிழகத்தின் வளத்தை பாதுகாக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.