இடிந்தகரை சர்ச்சுக்குள் அத்துமீறி நுழைந்த போலீசாரைக் கண்டித்து மதுரையில் கிறிஸ்தவர்கள் உண்ணாவிரதம்
மதுரை: இடிந்தகரை கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் போலீசார் அத்துமீறி நுழைந்ததைக் கண்டித்து மதுரையில் கிறிஸ்தவர்கள் இன்று காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இடிந்தகரையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் போலீசார் அத்துமீறி நுழைந்ததைக் கண்டித்து மதுரை காளவாசல் பகுதியில் அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில் இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகின்றது. இப்போராட்டத்திற்கு பாதிரியார் செல்வராஜ் தலைமை வகித்துள்ளார்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரை பகுதி மக்கள் 400 நாட்களுக்கு மேலாக அறவழியில் போராடி வரும் நிலையில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதைக் கண்டித்தும், இடிந்தகரை தேவாலயத்திற்குள் போலீசார் அத்துமீறி நுழைந்ததைக் கண்டித்தும், கிறிஸ்தவர்களின் ஆன்மீகத்தை களங்கப்படுத்தியதை கண்டித்தும், மத்திய-மாநில அரசுகள் போராட்டக் குழுவினர் மீது போட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெறக் கோரியும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள் பேசினர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் புதூர் பூமிநாதன், தொழிற்சங்க செயலாளர் மகபூப் ஜான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் எல்லாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.