பெட்ரோல் பங்குகள் இயங்குகின்றன.. 'ஸ்டிரைக்' இல்லை!
டெல்லி: நாடு முழுவதும் உள்ள 42,000 பெட்ரோல் பங்குகள் இன்றும், நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. இன்றும், நாளையும் பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல செயல்படும் என்று பெட்ரோல் வினியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் வினியோகஸ்தர்களுக்கு கிடைக்கும் வருமானம் பாதிக்காத வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் உயர்வை அமல்படுத்த கோரி, மத்திய பெட்ரோல் நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதை பெட்ரோல் நிறுவனங்கள் கண்டு கொள்ளாமல் விட்டதால், பெட்ரோல் வினியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் இன்றும், நாளையும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக செய்திகள் பரவின.
இதில் நாடு முழுவதும் சுமார் 42,000 பெட்ரோல் பங்குகள் உரிமையாளர்கள் கலந்து கொள்ள உள்ளதாக செய்திகள் பரவின. இந்த நிலையில் இன்றும், நாளையும் வேலை நிறுத்தம் நடத்த போவதாக வெளியான செய்து வதந்தி என்று பெட்ரோல் வினியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பெட்ரோல் வினியோகஸ்தர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
இன்றும், நாளையும் பெட்ரோல் பங்குகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக வெளியான செய்தி வதந்தி ஆகும். நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகள் இன்றும், நாளையும் வழக்கம் போல செயல்படும். எங்களுக்கு ஏற்படும் நிதி நெருக்கடி குறித்து மத்திய பெட்ரோல் நிறுவனங்களுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளோம். ஆனால் வேலை நிறுத்தம் நடத்தும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
பெட்ரோல் வினியோகஸ்தர்களுக்கு போக்குவரத்து மற்றும் செயல்பாட்டு செலவு அதிகரித்துள்ளது. எனவே பெட்ரோல் விநியோகிக்கும் நேரத்தை குறைத்து கொள்ள முடிவு செய்துள்ளோம். இதற்காக வரும் 15ம் தேதி முதல் பெட்ரோல் பங்குகள் ஒரு 'ஷிப்ட்' மட்டுமே செயல்படும். இதன்மூலம் பணியாளர்களின் சம்பளம் மற்றும் மின்சார பயன்பட்டு செலவு குறையும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேஸ் வினியோகஸ்தர் 'ஸ்டிரைக்':
கேஸ் வினியோகத்திற்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை கண்டித்து கேஸ் விநியோகஸ்தர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கேஸ் வினியோகஸ்தர்கள் சங்கம் அந்த வேலை நிறுத்தத்தை ரத்து செய்துள்ளது.