சென்னையில் நிதி நிறுவனத்தில் 8 கிலோ நகைகள் திருட்டு-நாடகமாடிய மேலாளர் கைது
சென்னை: பூந்தமல்லியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 8 கிலோ நகைகளை திருடிவிட்டு, கொள்ளையர்கள் திருடியதாக நாடகமாடிய மேலாளரை, போலீசார் கைது செய்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த 8 கிலோ நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் பிள்ளையார் கோவில் தெருவில் ஐ.ஐ.எப்.எல் என்ற தனியார் கோல்டு நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் மேலாளராக சங்கர் என்பவர் பணியாற்றி வந்தார்.
நேற்று விடுமுறை என்பதால் நிதி நிறுவனம் பூட்டிப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்றிரவு நிதி நிறுவனத்தில் கொள்ளையர்கள் புகுந்துவிட்டதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்ததது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு நிதி நிறுவனத்தின் கதவுகள் திறக்கப்பட்ட நிலையில், பாத்ரூம்மில் மேலாளர் சங்கர் அடைக்கப்பட்டிருந்தார்.
இது குறித்து மேலாளர் சங்கரிடம் போலீசார் விசாரித்த போது, இரவு 10 மணியளவில் நிதி நிறுவனத்தின் எச்சரிக்கை அலாரம் அடிப்பதாக தனது செல்போனுக்கு தகவல் கிடைத்ததால் அலுவலகத்திற்கு வந்ததாக தெரிவித்தார். அப்போது நிதி நிறுவனத்தின் கதவுகள் திறந்து கிடந்ததாகவும், உள்ளே சென்ற போது மறைந்திருந்த கொள்ளையர்கள் தன்னை பாத்ரூமில் தள்ளி பூட்டிவிட்டு, நகைகளை எடுத்து சென்றுவிட்டதாகவும் தெரிவித்தார்.
மேற்கண்ட தகவலை பதட்டம் இல்லாமல் சங்கர் கூறியதால், போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் நிதி நிறுவனம் முழுவதும் ஆய்வு செய்த போலீசார், இது குறித்து சங்கரிடம் தீவரமாக விசாரித்தனர். இதில் முன்னுக்கு பின்னாக சங்கர் பதிலளிக்க, போலீசாரின் சந்தேகம் உறுதியானது. இறுதியில் நிதி நிறுவனத்தில் இருந்த நகைகளை திருடியதை சங்கர் ஒத்துக் கொண்டார்.
இது குறித்து சங்கர், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,
இதற்கு முன்பு நான், முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, அங்கு வேலையை ராஜினாமா செய்துவிட்டு, இந்த நிறுவனத்தில் வந்து சேர்ந்தேன்.
ஆவடியில் வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கியிருக்கும் எனக்கு, குடிபழக்கம் உண்டு. தற்போது எனது மனைவி கர்ப்பமாக உள்ளார். இதனால் வெளியில் பலருடன் உல்லாசமாக இருக்க எனக்கு அதிக பணம் தேவைப்பட்டது. இதனால் நிதி நிறுவனத்தில் இருந்து திருட திட்டமிட்டேன்.
நான் வேலை பார்க்கும் நிதி நிறுவனத்தில் 2 லாக்கர்கள் உள்ளன. இதில் ஒரு சாவி என்னிடமும், இன்னொரு சாவி உதவி மானேஜர் தியாகு என்பவரிடம் அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் நகைகளை திருடுவது எளிதானது. ஆனால் போலீசாரிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க, கொள்ளையர்கள் நகைகளை திருடியதாக நாடகமாட முடிவு செய்தேன்.
நேற்றிரவு 9 மணிக்கு நிதி நிறுவனத்திற்கு வந்த நான் ஒரு லாக்கரை சாவி போட்டு திறந்து, அதில் இருந்த நகைகளை எடுத்து கொண்டேன். 174 பாக்கெட்டில் மொத்தம் 8 கிலோ எடை கொண்ட நகைகள் இருந்தது. இவற்றை ஒரு கோணிப்பையில் போட்டு கொண்டு, மோட்டார் சைக்கிளில் கோவர்த்தனகிரி குப்பை கிடங்கிற்கு சென்றேன்.
அங்கு நகைகளை மறைத்து வைத்து விட்டு மீண்டும் நிதி நிறுவனத்திற்கு வந்து பாத்ரூம் கதவின் மேலே வழியாக உள்ளே சென்று பதுங்கி கொண்டேன். அங்கிருந்து போலீசாருக்கும், நிதி நிறுவனத்தின் தலைமையகமான மும்பை அலுவலகத்திற்கும் கொள்ளை நடந்ததாக தகவல் அனுப்பினேன்.
போலீசார் வந்து விசாரித்த போது கொள்ளையர்கள் வந்து திருடியதாக கூறினேன். ஆனால் போலீசார் அதை நம்ப மறுத்து என்னை தீவிரமாக விசாரித்தனர். இதனால் உண்மையை சொல்லி விட்டேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து நிதி நிறுவன மேலாளர் சங்கரை கைது செய்த போலீசார், அவர் குப்பை கிடங்கில் மறைத்து வைத்திருந்த 8 கிலோ நகைகளையும் பறிமுதல் செய்தனர்.