ஓடிப்போன 'செம்மண்" பொன்முடி முன்ஜாமீன் மனு மீது 4ம் தேதி விசாரணை
சென்னை: செம்மண் குவாரி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முன்ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு மீது வரும் 4-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
விழுப்புரம் அருகே வானூரில் செம்மண் குவாரி கொள்ளை வழக்கில் பொன்முடியும் அவரது மகனும் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர். ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் சென்னையிலும் பொன்முடியையும் அவரது மகனையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஆனால் இன்னமும் சிக்கவில்லை. இந்த வழக்கில் பொன்முடியின் நண்பர் குமார் மற்றும் ஜெயச்சந்திரன் ஆகியோர் அகப்பட்டுள்ளனர்.
இதனிடையே பொன் முடி, அவரது மகன் கவுதமசிகாமணி மற்றும் குமார் ஆகியோர் சார்பில் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி பி.ராஜேந்திரன் முன்னிலையில் மனு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணை வருகிற 4-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.