பொற்கோவிலில் தாக்குதல் நடத்திய மாஜி ராணுவ அதிகாரிக்கு லண்டனில் கத்திக் குத்து
பிராரைத் தாக்கியவர்கள் சீக்கியர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. 1984ம் ஆண்டு பொற்கோவிலுக்குள் பதுங்கியிருந்த சீக்கியப் போராளிகளைப் பிடிக்க இந்திரா காந்தி, ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற பெயரில் பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பினார். அந்தப் படைப் பிரிவுக்கு பிரார்தான் தலைமை தாங்கிச் சென்றார். பொற்கோவிலுக்குள் நடந்த பயங்கர சண்டையில் பிந்தரன்வாலே உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.
ஓய்வு பெற்ற பிராருக்கு தற்போது 78 வயதாகிறது. இசட் பிரிவு பாதுகாப்பின் கீழ் இருந்து வரும் அவர் மனைவியுடன் தனிப்பட்ட பயணமாக லண்டன் சென்றார். அங்கு தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே வந்தபோது திடீரென அவர் மீது பாய்ந்த 4 பேர் கத்தியால் சரமாரியாக குத்தினர். அதில், பிராருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அந்தக் கும்பல் தப்பி ஓடி விட்டது.
காயமடைந்த பிராரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை இங்கிலாந்துக்கான இந்தியத் தூதர் பார்த்து நலம் விசாரித்தார். சிகிச்சைக்குப் பின்னர் பிரார் ஹோட்டலுக்குத் திரும்பினார்.
பிராரைத் தாக்கியவர்கள் சீக்கியர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.