பயிற்சிக்கு இந்தியாவுக்குதான் ராணுவத்தினரை அனுப்புவோம்: பசில் ராஜபக்சே
இலங்கை ராணுவ வீரர்களுக்கும், அதிகாரிகளுக்கு இந்தியாவில் போர் மற்றும் நிர்வாக பயிற்சி அளிப்பதற்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் தாம்பரம் விமானப்படை பயிற்சி தளத்தில் பயிற்சி எடுத்து வந்த சிங்கள ராணுவ வீரர்கள் தமிழக அரசின் எதிர்ப்பை தொடர்ந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள், தொடர் பயிற்சிக்காக பெங்களூர், அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் எந்த பகுதியிலும் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்க கூடாது என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறார். பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழர் அமைப்புகளும் இதனையே வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் அளிக்கப்படும் பயிற்சி திட்டம் தொடரும் என்று இலங்கை அமைச்சர் பசில் ராஜபக்சே கூறியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது :
பாரம்பரியத்தை மாற்றமாட்டோம்
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே எங்கள் வீரர்கள் பயிற்சிக்காக இந்தியா, அல்லது பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அந்த பாரம்பரியம் தொடரவே நாங்கள் விரும்புகிறோம். எங்கள் ராணுவ வீரர்களை பயிற்சிக்காக இந்தியாவுக்கு தொடர்ந்து அனுப்புவதில் உறுதியாக இருக்கிறோம். இதில் எந்தவித மாற்றமும் இல்லை.
எங்களிடம் பல்வேறு மாற்று வாய்ப்புகள் இருந்த போதிலும், அந்த திட்டங்களை நாங்கள் ஏற்க மாட்டோம். பாரம்பரியத்தை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை.
இந்தியாவில் சில பகுதிகளில் கிளம்பி இருக்கும் எதிர்ப்புகளால், பயிற்சி திட்டத்தை சீனாவுக்கு மாற்றும் எண்ணம் எங்களிடம் கிடையாது. எங்களின் முதல் தேர்வு இந்தியாதான். அடுத்த தேர்வாக தான் அமெரிக்கா போன்ற பிற நாடுகளுக்கு எங்கள் வீரர்கள் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்படுவர் இவ்வாறு அவர் கூறினார்.