காந்தியடிகள் போலீஸ் பதக்கம் பெற 5 போலீஸ் அதிகாரிகள் தேர்வு: தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் கள்ளச் சாராய ஒழிப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய 5 போலீஸ் அதிகாரிகளுக்கு, காந்தியடிகள் போலீஸ் பதக்கம் வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் சிறந்த 5 போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் போலீஸ் பதக்கங்கள் வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி,
1.மத்தியப் புலனாய்வுப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தேவராணி,
2.வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன்,
3.மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (தெற்கு மண்டலம், சென்னை), காவல் கூடுதல் துணை ஆணையாளர் விமலா,
4.தருமபுரி மாவட்டம் அரூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சக்திவேல்,
5.சென்னை மாதவரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தலைமைக் காவலர் ஸ்டாலின் சந்திரசேகர் ஆகியோருக்கு, கள்ளச் சாராய ஒழிப்புப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக காந்தியடிகள் காவலர் விருதுகள் வழங்கப்படும்.
இந்த விருதுகள் 2013ம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்படும். மேலும் இவ்விருதை பெறுபவர்களுக்கு பதக்கங்களுடன் பரிசுத்தொகையாக தலா ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.