நில அபகரிப்பு.. கருணாநிதியின் 'முரட்டு பக்தர்' தூத்துக்குடி பெரியசாமி தலைமறைவு!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பெண் ஒருவருக்குச் சொந்தமான 19.84 சென்ட் நிலத்தை அபகரித்து விட்டதாக தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி, அவரது மகன் உள்ளிட்ட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து பெரியசாமி தலைமறைவாகி விட்டார்.
திமுக தலைவர் கருணாநிதியின் முரட்டு பக்தர் என்று திமுகவினரால் செல்லமாக அழைக்கப்படுபவர் பெரியசாமி. தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளராக பல காலமாக இருந்து வருபவர். தூத்துக்குடி திமுகவில் அசைக்க முடியாத ஒரு நபர். இவரது மகள் கீதா ஜீவன் திமுக அமைச்சராக இருந்தவர்.
இந்த நிலையில் பெரியசாமி அவரது மகன் ஜெகன் உள்ளிட்ட 13 பேர் மீது நில அபகரிப்புப் புகார் கிளம்பியுள்ளது. தூத்துக்குடி கால்டுவெல் காலணியைச் சேர்ந்தவர் முகமது பாத்திமா. இவருக்கு தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு பகுதியில் 19 ஏக்கர் 84 சென்ட் நிலம் உள்ளது.
இந்த நிலத்தை தூத்துக்குடி மாவட்ட திமுக மாவட்டச் செயலாளர் பெரியசாமி, அவரது மகன் ஜெகன் உள்ளிட்ட 13 பேர் சேர்ந்து போ- ஆவணங்கள் மூலம் தனது நிலத்தை அபகரித்ததாக தூத்துக்குடி தெர்மல் நகர் காவல்நிலையத்தில் முகமது பாத்திமா புகார் செய்தார்.
இதில் எந்த விசாரணையும் நடைபெறவில்லை. இதையடுத்து நெல்லையில் உள்ள அதிமுக வழக்கறிஞர்கள் சிலர், பெரியசாமியை நிலஅபகரிப்பு தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, மேலும் அதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனால் பெரியசாமி, அவரது மகன் உள்ளிட்டோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.